"இதயம் நொறுங்கியது.. மாத்தணும்".. பிஎஸ்பிபி ஆசிரியர் பாலியல் விவகாரம் - அஷ்வின் "பொளேர்"
சென்னை: பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார் விவகாரம் குறித்து அஷ்வின் வேதனையுடன் ட்வீட் செய்துள்ளார்.
சென்னை கே.கே.நகரில் பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வணிகவியல் ஆசியராக உள்ளவர் ராஜகோபால், இவர் அங்கு பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். கடந்த 2016-ம் ஆண்டில் 12-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவி ஒருவர் கொடுத்த புகாரில் ராஜகோபால் கைதானார்
சமூக வலைதளங்களில் ஆசிரியர் ராஜகோபாலின் பாலியல் அத்துமீறல் குறித்த வெளியான இன்ஸ்டராகிராம் பதிவுகளை பார்த்து முன்னாள் மாணவி புகார் அளித்திருந்தார். ஆசிரியர் ராஜகோபால் மீது அப்போது பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் பள்ளி நிர்வாகம் எடுக்கவில்லை என்றும் அவரது பாலியல் தொந்தரவால் தான் மனரீதியாக பாதிக்கப்பட்டதாகவும் புகாரளித்திருந்தார்.

போக்ஸா சட்டம்
இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் நேற்று பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், நட்சத்திரங்களும் அந்த ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் எழுப்பி இருந்தனர். இந்த சூழலில் ராஜகோபால் மீது போக்ஸா சட்டம் பாய்ந்துள்ளது. வடபழனி காவல்நிலையத்தில் வைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் துணை கமிஷ்னர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். நேற்று மாலையில் இருந்து இன்று காலை வரை விடிய விடிய அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதயம் நொறுங்குகிறது
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின், இந்த விவகாரம் குறித்து வேதனையுடன் ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து அவர், "சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பள்ளிகளிலிருந்து, குறிப்பாக பிஎஸ்பிபி-யிலிருந்து ராஜகோபாலைப் பற்றி வெளிவரும் செய்திகளை கேட்கும்போது இதயம் நொறுங்குகிறது.

மறுபரிசீலனை
அங்கு நான் படித்த வரை அவரை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. ஆனால் இந்த செய்திகள் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளன. நீதி மற்றும் சட்டம் அதன் நடவடிக்கையை எடுக்கும் என்று எனக்குத் தெரியும். ஆனால் இப்போது அமைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

எல்லாத்தையும் மாற்றனும்
பள்ளி மதிப்பெண் கிரேட் மற்றும் அதைத் தாண்டிய அளவுகோல்களை நினைத்து அச்சம் கொள்ளாமல், பாதுகாப்பற்றதாக உணரக்கூடிய எந்தவொரு சிறிய நிகழ்வுகளாக இருந்தாலும், குழந்தைகள் தைரியமாக புகாரளிக்க ஊக்குவிக்கும் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை நாம் உருவாக்க வேண்டும். நமது குழந்தைகளே நமது செல்வம்.

எல்லோரும் தடுக்கணும்
PSBB இன் பழைய மாணவனாக மட்டுமல்லாமல், 2 மகள்களின் தந்தையாகவும், இரண்டு மன உளைச்சலான இரவுகளை கடந்தேன். ராஜகோபாலன் என்பது இன்று வெளிவந்த ஒரு பெயர், ஆனால் எதிர்காலத்தில் நம்மைச் சுற்றியுள்ள இத்தகைய நிகழ்வுகளைத் தடுக்கவும் அமைப்பில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தவும் நாம் செயல்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications