சென்னை: உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் சூழலில், 1975 மற்றும் 1979 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடர் குறித்தும் இந்திய அணி பற்றியும் இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 2 வாரங்களே உள்ளது. உலகக்கோப்பை தொடருக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் இந்தியாவுக்கு புறப்பட தயாராகி வருகின்றனர். அதேபோல் உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அக்.5ஆம் தேதி தொடங்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், நவ.19ஆம் தேதி நடக்கவுள்ளது.

மொத்தமாக 52 நாட்களில் 45 லீக் போட்டிகள் நடக்கவுள்ளது. இதற்காக 10 மைதானங்கள் சிறப்பாக தயார் செய்யப்பட்டு வருகின்றனர். அதேபோல் அத்தனை மைதானங்களின் பிட்ச்களையும் ஐசிசி தீவிரமாக கவனித்து வருகிறது. அதேபோல் டிக்கெட் விற்பனையும் சூடுபிடித்துள்ள நிலையில், ரசிகர்களிடையே உலகக்கோப்பை ஃபீவர் அதிகமாகி வருகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உலகக்கோப்பை தொடர்பாக குட்டி ஸ்டோரிகளையும், யாருக்கும் தெரியாத தகவல்களையும் பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவுடன் இணைந்து பேசி வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அதன் முதல் வீடியோ 1975 மற்றும் 1979 ஆகிய உலகக்கோப்பை தொடர்கள் பற்றி பேசப்பட்டுள்ளது.
அதில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஹர்ஷா போக்ளே பேசுகையில், தற்போது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 52 நாட்கள் நடத்தப்படுகிறது. அதிலும் 1975 உலகக்கோப்பை வெறும் 5 நாட்கள் முடிவடைந்துவிட்டது. 8 அணிகள் இரு குரூப்களாக பிரிக்கப்பட்டு, ஒரே நாளில் ஒரே நேரத்தில் 4 மைதானங்களில் 4 போட்டிகள் நடத்தப்படும். அந்த வகையில் 3 நாட்களில் குரூப் போட்டிகள் முடிவடையும்.

அதன்பின் இரு அரையிறுதிப் போட்டிகள் ஒரே நாளில் நடத்தப்படும். இறுதியாக 5வது நாளில் இறுதிப்போட்டி நடத்தப்படும். 1975ஆம் உலகக்கோப்பையை பொறுத்தவரை அதனை யாரும் முதலில் தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ரைவல்ரி உலகக்கோப்பையை திரும்பி பார்க்க வைத்தன.
அந்த உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் கிளைவ் லாய்ட் வெறும் 85 பந்துகளில் 102 ரன்கள் விளாசினார் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம், ஸ்வெட்டர் இல்லாமல் இங்கிலாந்து குளிரில் இந்தியா தவித்தது உள்ளிட்ட பல சம்பவங்களையும் குறிப்பிட்டுள்ளார்.