லண்டன்: 11 ஆண்டுகளாக ஜாம்பவான் சுழற்பந்துவீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் நேதன் லயன் ஆகியோரால் முடியாததை, 22 வயதேயாகும் ஆஸ்திரேலிய இளம் வீரர் டாட் மர்ஃபி செய்து மிரட்டியுள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 295 ரன்கள் எடுத்து 12 ரன்கள் முன்னிலை பெற்றது. இதில் 9வது விக்கெட்டாக களமிறங்கிய இளம் சுழற்பந்துவீச்சாளர் டாட் மர்ஃபி 3 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் விளாசி 34 ரன்கள் சேர்த்தார்.

கடைசி நேரத்தில் இவரின் அதிரடி ஆட்டம் ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற முக்கிய காரணமாக அமைந்தது. இதன்பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டது. இதனால் இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்த ஆஸ்திரேலிய அணி டாட் மர்ஃபியை முன்னிறுத்தியது. குறிப்பாக ஜோ ரூட்டை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போது, டாட் மர்ஃபி வீசிய பந்தில் போல்டாகி 91 ரன்களில் வெளியேறினார்.
இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் வீரரான ஜோ ரூட் இளம் வீரரான ட்அஅட் மர்ஃபி பந்தில் போல்டாகி வெளியேறியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் ஜாம்பவான் வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் நேதன் லயன் கூட இதுவரை ஜோ ரூட்டை போல்ட் முறை விக்கெட் வீழ்த்தியதில்லை. இதுவரை 237.3 ஓவர்கள் வீசியும் இரு ஜாம்பவான்களால் முடியாததை, 22 வயதேயான இளம் வீரர் செய்து காட்டியுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியா அணிக்காக அறிமுகமான டாட் மர்ஃபி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். 4 போட்டிகளில் விளையாடிய டாட் மர்ஃபிம் விராட் கோலி விக்கெட் உட்பட மொத்தமாக 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போது ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து மைதானத்திலேயே சிறப்பாக செயல்பட்டு வருவதால், லயனுக்கு பின் டாட் மர்ஃபி ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஸ்பின்னராக இருப்பார் என்று பாராட்டப்பட்டு வருகிறது.