பெங்களூர்: இந்தியா டி அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா சி அணிக்காக ஆடிய தமிழ்நாடு வீரர் இந்திரஜித் ஒற்றை ஆளாக போராடி டெய்லண்டர்களுடன் இணைந்து 72 ரன்களை விளாசி இருக்கிறார். 108 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது, கடைசி 2 பேட்ஸ்மேன்களை வைத்து கொண்டு இந்திரஜித் போராடி அணியின் ஸ்கோரை 168 ரன்களாக உயர்த்தியுள்ளார்.
துலீப் டிராபி தொடரில் இந்தியா சி அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா டி அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா டி அணி 164 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அந்த அணியின் அக்சர் படேல் மட்டும் 86 ரன்கள் சேர்த்து அசத்தினார். இதன்பின் களமிறங்கிய இந்தியா சி அணி முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 91 ரன்கள் சேர்த்திருந்தது.

இதன்பின் 2வது நாள் ஆட்டத்தை அபிஷேக் போரல் - இந்திரஜித் கூட்டணி தொடங்கியது. இதில் அபிஷேக் போரல் கூடுதலாக 2 ரன்கள் மட்டுமே சேர்த்து 34 ரன்களில் ஆட்டமிழக்க, மனவ் சுதார் 1 ரன்னிலும், ஹிருத்திக் ஷோக்கின் 5 ரன்களிலும், விஜய்குமார் வைஷாக் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா சி அணி 108 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது ஆட்டத்தின் கட்டுப்பாட்டை மொத்தமாக இந்திரஜித் எடுத்து கொண்டார். அன்சுல் கம்போஜ்-க்கு முடிந்த வரை ஸ்ட்ரைக் கொடுக்காமல் கடுமையாக இந்திரஜித் போராடினார். இதன் காரணமாக இந்தியா சி அணியின் ஸ்கோரை 150 ரன்களை கடந்தது. சிறப்பாக ஆடிய பவுண்டரிகள் மூலமாக பேட்டிங் செய்த இந்திரஜித் அரைசதத்தை கடந்தார்.
ஒரு கட்டத்தில் பெரிய முன்னிலையை கொடுத்துவிடக் கூடாது என்று பார்க்கப்பட்ட நிலையில், இந்திரஜித்தின் ஆட்டத்தால் 4 ரன்கள் முன்னிலை பெற்றது. சிறப்பாக ஆடிய இந்திரஜித் 149 பந்துகளில் 9 பவுண்டரிகள் உட்பட 72 ரன்களை விளாசி அசத்தினார். டெய்லண்டர்களில் ஒருவர் கூட 5 ரன்களுக்கு மேல் எடுக்காத நிலையில், இந்திரஜித் தனியாளாக எப்படி ஆடியிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இறுதியாக இந்தியா சி அணி 168 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன்பின் இந்தியா டி அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்த நிலையில் துலீப் டிராபியில் அசத்தலாக ஆடிய இந்திரஜித்தை சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். அதில், பாபா இந்திரஜித்தின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் இது. டாப் குவாலிட்டியுடன் விளையாடக் கூடிய வீரர். விரைவில் நல்ல விஷயங்கள் நடக்கும். தொடர்ந்து போராடு என்று வாழ்த்தியுள்ளார்.

டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் அணிக்காக அஸ்வினுடன் இணைந்து விளையாடியவர் இந்திரஜித். இந்த சீசன் முடிவடைந்த பின் அஸ்வின் பேசுகையில், இந்தியாவிலேயே ஸ்பின்னர்களை மிகச்சிறப்பாக எதிர்கொள்ளக் கூடிய வீரர்களில் பாபா இந்திரஜித்தும் ஒருவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று பாராட்டி இருந்தார். தற்போது துலீப் டிராபியில் பாபா இந்திரஜித் அசத்தலாக விளையாடி முதல் போட்டியிலேயே திறமையை நிரூபித்திருப்பது அஸ்வினின் பாராட்டுக்கு நியாயம் சேர்த்துள்ளதாக பார்க்கப்படுகிறது.