மும்பை: இண்டர்நேஷனல் லீக் டி20 தொடரில் விளையாடுவதற்காக தமிழக ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது பெயரில் விண்ணப்பித்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பாக ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்திருந்த அஸ்வின், உடனடியாக ஐஎல்டி20 லீக்கில் விளையாட முடிவு செய்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதன்பின் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக ஆடிய அவர், சில நாட்களுக்கு முன்பாக ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேபோல் ஓய்வு பெறுவதாக அறிவித்த பதிவிலேயே, இனி சர்வதேச லீக் தொடர்களில் விளையாட உள்ளேன் என்று அஸ்வின் அறிவித்திருந்தார். இதன் காரணமாக எஸ்ஏ20 லீக், எம்எல்சி மற்றும் ஐஎல்டி20 லீக் ஆகியவற்றில் அஸ்வின் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இண்டர்நேஷனல் லீக் டி20 தொடருக்கான செப்டம்பர் 30ஆம் தேதி நடக்க உள்ளது.
இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அஸ்வினால் ஐஎல்டி20 லீக் ஏலத்தில் பங்கேற்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் துபாயில் நடக்கும் ஐஎல்டி20 லீக் தொடரில் விளையாட அஸ்வின் முடிவு செய்து, தனது பெயரில் ஏலத்தில் விண்ணப்பித்திருக்கிறார். இதுகுறித்து அஸ்வின் பேசுகையில், ஐஎல்டி20 லீக்கில் விளையாட எனது பெயரில் விண்ணப்பித்திருக்கிறேன்.
நிச்சயம் ஒரு அணி என்னை வாங்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடருக்கு பின் எஸ்ஏ20 லீக் மற்றும் ஐஎல்டி20 லீக் ஆகிய இரு தொடர்களிலும் இந்திய வீரர்கள் அதிகளவில் விளையாட தொடங்கி இருக்கின்றனர். ஐஎல்டி20 லீக் தொடரில் ஏற்கனவே யூசுப் பதான், ராபின் உத்தப்பா மற்றும் அம்பாதி ராயுடு உள்ளிட்ட வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
அஸ்வினின் வருகை ஐஎல்டி20 லீக்கிற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். ஏனென்றால் இந்தியாவில் அஸ்வினின் ஒவ்வொரு ஆட்டமும் கவனிக்கப்படும் பட்சத்தில், ஐஎல்டி20 லீக்கிற்கு கூடுதல் வெளிச்சம் இந்திய ரசிகர்கள் இடையே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஐஎல்டி20 லீக்கை கடந்த சில ஆண்டுகளாக அஸ்வின் கூர்மையாக கவனித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.