சென்னை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அணியை விட்டு வெளியேறப் போவதாக வதந்திகள் பரவி வருகின்றன. ஒருவேளை சஞ்சு சாம்சன் வெளியேறினால், அந்த அணிக்கு யார் கேப்டனாக வருவார் என்ற கேள்வி ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, 38 வயதான தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ராஜஸ்தான் அணியின் அடுத்த கேப்டனாக வர வாய்ப்புள்ளது என்று கூறி, புதிய விவாதத்தை தொடங்கி வைத்துள்ளார்.

கடந்த 2025 ஐபிஎல் சீசனில், சஞ்சு சாம்சன் சில போட்டிகளில் விளையாடாதபோது, இளம் வீரர் ரியான் பராக் கேப்டனாகச் செயல்பட்டார். ஆனால், அவர் தலைமையில் 8 போட்டிகளில் வெறும் 2-ல் மட்டுமே ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல் போன்ற இளம் வீரர்கள் இருந்தாலும், கேப்டன் பதவிக்கு அவர்கள் இன்னும் தயாராகவில்லை என்று சோப்ரா கருதுகிறார்.
"சஞ்சு வெளியேறினால் ராஜஸ்தானுக்கு யார் கேப்டன் என்று யோசித்தேன். துருவ் ஜூரல் இன்னும் மிக இளையவர். யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு கேப்டனாக வேண்டும் என்ற ஆசை இருக்கலாம், ஆனால் அணி நிர்வாகம் இப்போது அவர் மீது அந்தப் பொறுப்பை வைக்கும் என்று நான் நினைக்கவில்லை. ரியான் பராக் கடந்த சீசனில் சுமாராகவே கேப்டன்சி செய்தார். எனவே, அஸ்வின் ஒரு சிறந்த தேர்வாக இருப்பார்," என்று ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.
சஞ்சு சாம்சனை தங்கள் அணிக்கு இழுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி தீவிரம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில், ரவிச்சந்திரன் அஸ்வினும் சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேற விரும்புவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக அஸ்வின் மற்றும் மேலும் சில வீரர்களை வாங்க ராஜஸ்தான் ராயல்ஸ் திட்டமிடுவதாகத் தெரிகிறது.
இந்த வீரர் மாற்றம் நடந்தால், இரு அணிகளுக்குமே அது சாதகமாக அமையும் என்பது சோப்ராவின் கணிப்பு. "சஞ்சு சாம்சன் சிஎஸ்கே-வுக்கு வந்தால், தல தோனி ஓய்வு பெற்ற பிறகு, விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் வரிசை பலப்படும். ராஜஸ்தான் அணிக்கு ஒரு அனுபவமிக்க கேப்டன் கிடைப்பார். மேலும், அவர்களுக்கு ஒரு நல்ல ஆஃப்-ஸ்பின்னரும் தேவை. அந்த இடத்தையும் அஸ்வின் பூர்த்தி செய்வார். இது இரு அணிகளுக்குமே ஒரு சரியான டீலாக அமையும்," என்று சோப்ரா மேலும் விளக்கமளித்துள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலம் நெருங்கி வரும் வேளையில், அணிகளுக்கு இடையே நடக்கும் இந்த ரகசியப் பேச்சுவார்த்தைகள், கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை இந்த பேச்சுவார்த்தை உறுதியானால், சஞ்சு சாம்சன் மஞ்சள் ஜெர்சியிலும், அஸ்வின் ராஜஸ்தான் கேப்டனாகவும் களமிறங்குவதைப் பார்க்க முடியும்.