சென்னை: 2025 தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அவர் கேப்டனாக இருக்கும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர் பந்தை சேதப்படுத்தியதாக மதுரை பாந்தர்ஸ் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மதுரை பாந்தர்ஸ் அணி அளித்த புகாரை திரும்பப் பெற்றுவிட்டதாக தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் தலைமை செயல் அதிகாரி பிரசன்னா கண்ணன் அறிவித்துள்ளார். இதன் மூலம் இந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியின் போது மழை பெய்திருந்ததால் ஆடுகளம் ஈரமாக இருந்தது. அதனால் பந்தும் ஈரம் அடைந்து இருந்தது. எனவே, பந்தை துடைப்பதற்கு இரண்டு அணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
அப்போது ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியைச் சேர்ந்தவர்கள் ரசாயனம் கலந்த துண்டை வைத்து பந்தை தேய்த்ததாகவும், அதனால் பேட்டிங் செய்யும்போது பந்து உலோகம் போன்ற சத்தத்தை எழுப்பியதாகவும் மதுரை பாந்தர்ஸ் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு பிரீமியர் லீக் நிர்வாகம் இதற்கு ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டிருந்தது. ஒருவேளை ஆதாரத்தை சமர்ப்பிக்கவில்லை என்றால், தவறான புகாரை அளித்ததற்காக மதுரை பாந்தர்ஸ் அணி மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தது. இந்த நிலையில்தான் மதுரை அணி அந்தப் புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்திருக்கிறது.
இதுகுறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், "கவனமான ஆய்வுக்குப் பிறகு, மதுரை பாந்தர்ஸ் அணியின் நிர்வாகம் மற்றும் அதன் பயிற்சியாளர்கள் இந்தப் புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வதற்கு முடிவு செய்திருக்கின்றனர். இந்த விளையாட்டு மற்றும் தொடரை நல்ல விதத்தில் நடத்துவதற்கான முயற்சியாக அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்."
"மேலும், அவர்களது புகார் ரவிச்சந்திரன் அஸ்வின் அல்லது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மற்றும் போட்டி நடுவர்கள், தமிழ்நாடு பிரீமியர் லீக் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்பு ஆகிய யாரையும் மரியாதை குறைவாக காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியிடப்படவில்லை. இந்தப் புகார் திரும்பப் பெறப்பட்டிருக்கும் நிலையில், இந்த விவகாரம் இத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது. இனி இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது."
"தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் விதிப்படி, இந்த விவகாரத்தில் ஆய்வு செய்யப்பட்டது. என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அனைத்து தரப்பினருக்கும் சொல்லப்பட்டது. மதுரை பாந்தர்ஸ் அணி இந்த புகார் தொடர்பாக போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டது" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.