சென்னை : அஸ்வினை குறி வைத்து சுமார் மூன்று மணி நேரம் ட்விட்டரில் பல பதிவுகளை போட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தார் முன்னாள் இந்திய அணி வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்.
ஆனால், அடுத்த ஒரு சில மணி நேரத்தில் ஒரே தொலைபேசி அழைப்பில் விமர்சனம் செய்தவரை "ஆஃப்" செய்து விட்டார் அஸ்வின். முதலில் இருந்து என்ன நடந்தது என பார்ப்போம்.

இரு நாட்களுக்கு முன்பு அஸ்வின் பந்துவீசும் விதம் சரியில்லை என்று ஒரு புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்தார். அஸ்வின் தன்னை தொடர்பு கொண்டால் தான் அவருக்கு உதவ முடியும் என்றார் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன். அவர் இந்திய அணியில் சுழற் பந்துவீச்சாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு அடுத்த நாள் 2023 உலகக்கோப்பை வர்ணனையாளர்கள் பட்டியல் (செப்டம்பர் 30) மாலை வெளியானது. அதில் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் பெயர் இடம் பெறவில்லை. அவர் கடந்த 20 ஆண்டுகளாக கிரிக்கெட் வர்ணனையில் சிறந்து விளங்கியவர்களில் ஒருவர். எனினும், கடந்த சில ஆண்டுகளாக அவரை தொலைக்காட்சிகள் பயன்படுத்துவதை குறைத்து விட்டன.
அதனை அடுத்து 2023 உலகக்கோப்பைக்கான வர்ணனையாளர் குழுவை கடுமையாக விமர்சனம் செய்தார் அவர். அந்த குழுவில் ஒரு முழு நேர ஸ்பின்னர் கூட இல்லை. பின் எப்படி ரசிகர்கள் ஸ்பின் குறித்து தெரிந்து கொள்வார்கள் எனவும் அவர் கூறி இருந்தார்.
அப்போது ட்விட்டரில் சிலர் அஸ்வினை பற்றி புகழ்ந்து பேசினர். ஏற்கனவே, வர்ணனை பணியில் புறக்கணிக்கப்பட்ட எரிச்சலில் இருந்த அவர் அஸ்வின் என்ன பெரிய ஆளா? என்கிற ரீதியில் அவரை மரியாதை குறைவாக பேசத் துவங்கினார்.
அங்கே இருந்து ஆரம்பித்து, அஸ்வின் பற்றி புகார் கூறும் வகையில், அஸ்வின் இந்திய மைதானங்களில் பிட்ச்களை சேதம் செய்துதான் அதிக விக்கெட்களை வீழ்த்தினார் என்றும், மைதான ஊழியர்களிடம் பிட்ச்சில் எங்கே சேதம் செய்ய வேண்டும் என கூறுவார் என்றும் கூறி அதிர வைத்தார்.
மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் மற்றும் தோனிக்கு அஸ்வின் துரோகம் செய்தார் என அது தொடர்பான சில சம்பவங்களை அவர் குறிப்பிட்டு பரபரப்பை கிளப்பி இருந்தார். (அந்த செய்தி தொடர்பான லிங்க் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.)
முதலில் சிலர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணனுடைய அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டு விட்டதோ என நினைத்தனர். ஆனால், உண்மையிலேயே நான் தான் இதை சொல்கிறேன் என அதற்கும் விளக்கம் கொடுத்து இருந்தார் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்.
அதைத் தொடர்ந்து இந்திய அளவில் இணைய ஊடகங்கள் அவரது பதிவுகளை செய்தியாக மாற்றினர். ஏன் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் இப்படி பேசுகிறார் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது.
இந்த நிலையில், அன்று இரவே அஸ்வின் அவருக்கு தொலைபேசியில் அழைத்து பேசியதாகவும், தன் அறிவுரைகளை கேட்டுக் கொண்டதாகவும் கூறி அஸ்வினுக்கு வாழ்த்தும் கூறி இந்த பிரச்சனையை முடித்துக் கொண்டு இருக்கிறார் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன். அஸ்வினை இவ்வளவு பேசிய பின்பும், அஸ்வின் இவரிடம் பந்துவீச்சு குறித்த ஆலோசனைகளை பெற்றதாக கூறியது தான் இதில் உச்சகட்டம்.
அஸ்வின் தன்னிடம் மரியாதையாக பேசியது போல அவர் கூறி இருந்தாலும், ரசிகர்கள் சிலர், அஸ்வின் தொலைபேசியில் அவரை வெளுத்து கட்டி இருப்பார். அதனால் தான் சில மணி நேரத்தில் அந்தர்பல்டி அடித்து விட்டார் என கூறி வருகின்றனர். அஸ்வின் போன் போட்டு என்ன பேசி இருப்பாரோ?