சென்னை: உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியிலோ அல்லது முக்கியமான போட்டியிலோ விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற முக்கியமான வீரர்களை மன்கட் முறையில் அவுட் செய்தால், அந்த வீரர் மீதான விமர்சனங்கள் எட்டுத்திக்கும் அதிகரிக்கும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ஷடாப் கானை மன்கட் முறையில் ஆஃப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது. இதனால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் ஃபசல்ஹக் ஃபரூக்கியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் மூலம் கிரிக்கெட் வட்டாரத்தில் மன்கட் பற்றிய விவாதம் மீண்டும் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து ரசிகர் ஒருவர், இதுவரை மன்கட்டை செய்த அணிகள் மட்டுமே அதனை ஆதரித்து வருகின்றன. ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை, ஆஷஸ் போன்ற போட்டிகளில் மன்கட் முறையில் விக்கெட் வீழ்த்தப்படுவதில்லை. ஏனென்றால் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வெற்றி, தோல்வியை கடந்த விளையாட்டே பெரிதாக உள்ளது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மன்கட்டிற்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இவ்வளவு ஏன், இந்திய அணி கூட தோனி, ரோகித், கோலி கேப்டன்சியில் மன்கட் செய்யவில்லை. மகளிர் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடர்கள் மூலமாக ரசிகர்கள் ஓரளவிற்கு ஆதரவு அளிக்கிறார்கள். ஆனால் உலகக்கோப்பைத் தொடரிலோ அல்லது விராட் கோலி சதம் விளாசுவதற்கு நெருங்கும் போதோ மன்கட் முறையில் வீழ்த்தினால், நிச்சயம் சூழல் வேறு மாதிரி ஆகிவிடும் என்று பதிவிட்டார்.
இதற்கு பதிலளித்து ரவிச்சந்திரன் அஸ்வின், விராட் கோலி,ரோகித் சர்மா, ஜோ ரூட் அல்லது ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை முக்கியமான கட்டத்தில் அல்லது உலகக்கோப்பை அரையிறுதியில் மன்கட் செய்து வெளியேற்றினால் என்ன நடக்கும் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். நிச்சயம் விமர்சகர்கள் உட்பட அனைவரும் அந்த வீரரின் திறனையும், குணத்தையும் மோசமாக விமர்சிக்க தொடங்கிவிடுவார்கள். அதேபோல் அந்த வீரரின் ரசிகர்களும் மோசமாக விமர்சிப்பார்கள்.
இதனால் பேட்ஸ்மேன்கள் அனைத்து நேரங்களிலும் பவுலர்களின் கைகளில் இருந்து பந்து சென்றுவிட்டதா என்பதை பார்த்த பின் ரன் ஓடுவது மன்கட்டை தடுப்பதற்கான வழி. ஒருவேளை பேட்ஸ்மேன் க்ரீஸில் இருந்து வெளியேறும் பட்சத்தில், பவுலர்கள் நிச்சயம் ரன் அவுட் செய்ய வேண்டும். அதன்பின் பேட்ஸ்மேன்கள் வெளியேற யோசிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். அஸ்வினின் இந்த பதிவு ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.