“வைபவ் சூர்யவன்ஷி தண்ணீர் கொடுப்பது கேவலமான செயல் இல்லை”.. வெகுண்டு எழுந்த அஸ்வின்.. என்ன நடந்தது?
சென்னை: இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பளிக்காமல், தண்ணீர் எடுத்துச் செல்ல வைத்ததாக விமர்சனம் எழுந்தது. அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் 0-2 என இந்திய அணி தோற்றதைத் தொடர்ந்து, ஐபிஎல் 2026 தொடரில் 700-க்கும் அதிகமான ரன்கள் குவித்து அசத்திய வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படாதது பெரும் விவாதப் பொருளானது. அவர் மைதானத்தில் சக வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை வழங்கியதைப் பார்த்த சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிசிசிஐ, கம்பீர் ஆகியோரை விமர்சித்தனர்.
அப்போது அஸ்வின் வைபவ் சூர்யவன்ஷி "வாட்டர் பாய்" வேலை செய்வதில் தப்பில்லை என அதை நியாயப்படுத்தி பேசி இருந்தார். அந்த கருத்தையும் ரசிகர்கள் விமர்சித்தனர். இதற்கு வெகுண்டு எழுந்து தனது யூடியூப் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார் அஸ்வின்.

"சக வீரர்களுக்கு தண்ணீர் கொடுப்பது எப்போதிலிருந்து கேவலமான செயலாக மாறியது? 1990 மற்றும் 2000-களில் நான் சென்னையில் ஒரு பால் பாயாக (Ball Boy) இருந்தேன். அப்போது வீரர்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி இருந்தது. இந்திய வீரர்களுக்கு ஓடிச் சென்று தண்ணீர் கொடுப்பது எப்படி குறைவான செயலாக மாறும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பேசிய அஸ்வின், "வைபவ் சூர்யவன்ஷி ஒரு மிகச்சிறந்த திறமைசாலி என்பதில் சந்தேகமில்லை. அவருக்கு நிச்சயம் ஒரு நாள் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் மைதானத்திற்கு வெளியே அமர்ந்து ஆட்டத்தைக் கவனிப்பதிலும், அணி வீரர்களுக்கு உதவுவதிலும் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். சச்சின் டெண்டுல்கரைப் போல இவருக்கு நீண்ட எதிர்காலம் உள்ளது. ஆரம்பத்திலேயே வெளியே அமர்ந்து விளையாட்டைக் கவனிப்பது, அவருக்கு அணியின் சூழலைப் புரிந்து கொள்ளவும், பக்குவத்தை வளர்த்துக் கொள்ளவும் உதவும்" என்று நியாயப்படுத்தினார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று (ஜூலை 1) தொடங்கவுள்ள நிலையில், சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே சமயம், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோருக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications
