சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டு இருக்கிறார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டி லக்னோவில் உள்ள ஏகனா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் போது தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் டெவான் கான்வே அணியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவித்தார்.
அவர்களுக்கு பதிலாக ஜேமி ஓவர்டன் மற்றும் ஷேக் ரஷீத் அணியில் சேர்க்கப்பட்டதாக சொன்னார். இந்த போட்டிக்கு முன்னதாக முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் அஸ்வின் மீது கடும் விமர்சனத்தை முன் வைத்திருந்தார். அவரை அணியை விட்டு நீக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார்.

அதன்படியே தோனியும் செய்திருக்கிறார் என்பது தான் ஆச்சரியம். ஸ்ரீகாந்த் அப்போது பேசுகையில், "நான் இந்தத் தொடர் துவங்கும் போது என்ன நினைத்தேன் தெரியுமா? சிஎஸ்கேவில் நாம் அதிரடியான பவுலிங் லைன் அப்பை வைத்திருக்கிறோம் என்று நினைத்தேன். ஒவ்வொரு அணியும் சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவின் மூன்று உலக தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள் (அஸ்வின், ஜடேஜா, நூர் அகமது), மதீஷா பதிரானா மற்றும் கலீல் அகமது ஆகியோரை சந்திக்க திணறுவார்கள் என்று நினைத்தேன்."
"சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங்கைத்தான் அதிகம் நம்பி இருக்கும், 180 ரன்கள் அடித்து பந்துவீச்சினை வைத்து வெற்றி பெறும் என்று நினைத்தேன். ஆனால் அந்தத் திட்டம் முற்றிலுமாக விழுந்துவிட்டது."
"எங்கே அது தவறாக சென்றது? அஸ்வின் மிக மோசமாக பந்து வீசுகிறார். அவர் மிக, மிக மோசமாக பௌலிங் செய்கிறார். அஸ்வின் அடுத்த போட்டியில் பிளேயிங் லெவனில் இருப்பாரா? என்று என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. என்னை கேட்டால் அவரை அணியிலிருந்து நீக்கி விடுங்கள். ஜடேஜா அவரது உச்சத்தில் இல்லை. அஸ்வின் மிக மோசமாக பௌலிங் செய்கிறார். அவரை நிச்சயமாக நாம் அணியில் இருந்து நீக்க வேண்டும்."
"ஆனால், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அதை செய்யுமா? என எனக்கு தெரியவில்லை. லக்னோ அணியில் சில இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆனால், சிஎஸ்கே அணி இந்த அதிரடியான முடிவை எடுத்து அஸ்வினை வெளியேற்றுமா என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது. நான் எப்போதும் அஸ்வினை ஆதரித்து வந்துள்ளேன். ஆனால் இப்போது அவரை நீக்க வேண்டும்."
"அவரை இரண்டு போட்டிகளில் வெளியே உட்கார வைத்தால்தான் அவர் தனது இடத்தின் மதிப்பை உணர்வார். அதன் பின்பு அவர் இன்னும் அதிக உத்வேகத்துடன் விளையாடுவார்" என்றார் ஸ்ரீகாந்த். அவர் சொன்னது போலவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அந்த அதிரடியான முடிவை எடுத்து ரவிச்சந்திரன் அஸ்வினை அணியிலிருந்து நீக்கி இருக்கிறது.