சென்னை: இந்திய டெஸ்ட் அணியின் மிக மோசமான ஒரு போட்டி என்றால் அது 2020 ஆம் ஆண்டு அடிலெய்டு மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி தான். அந்த போட்டியின் போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 53 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது. அந்தப் போட்டியில் படுதோல்வி அடைந்தது இந்திய அணி.
அதன் பின் அதே டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்று வரலாறு படைத்தது. மிக மோசமான தோல்வியில் இருந்து இந்திய அணி மீண்டு வந்தது இன்றளவும் கிரிக்கெட் உலகில் மறக்க முடியாத நிகழ்வாக உள்ளது. அது எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து அந்த தொடரில் பங்கேற்ற ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

அப்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அந்த மோசமான தோல்விக்கு பின் இந்திய வீரர்களுக்கு இரவு விருந்து அளித்து இருந்ததையும், அப்போது பாட்டுப் பாடி இந்திய வீரர்களின் மனநிலையை அவர் மாற்றியது குறித்தும் விவரித்தார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியான அடிலெய்டு டெஸ்டுடன் விராட் கோலியும் ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவுக்கு திரும்பினார். அவருக்கு முதல் குழந்தை பிறக்க இருந்ததால் அவர் தன் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இருக்க வேண்டும் என முடிவு செய்து ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்தார்.
அடுத்த மூன்று போட்டிகளிலும் கேப்டன் விராட் கோலி இல்லாமல் இந்திய அணி ஆடவேண்டிய நிலை ஏற்பட்டது. அத்துடன் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் இந்திய வீரர்கள் சோகத்தில் இருந்தனர். இது போன்ற ஒரு இக்கட்டான நிலையில் இந்திய வீரர்களுக்கு இரவு விருந்து அளித்தார் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. அப்போது என்ன நடந்தது என அஸ்வின் விவரித்தார்.
"அந்த மோசமான தோல்விக்கு பின் நாங்கள் டெஸ்ட் தொடரை வெல்வது குறித்து சிந்திக்கவில்லை. மொத்த அணியின் மனநிலையும் சோகமயமாக இருந்தது. அன்றைய இரவு ரவி சாஸ்திரி விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த விருந்தில் அவர் பாட்டு பாடினார். அவர் கரோக்கியை ஓட விட்டு பாட்டு பாடினார். ரவி சாஸ்திரியை தொடர்ந்து வேறு சில வீரர்களும் பாட்டு பாடத் தொடங்கினர்."
"அப்போது விராட் கோலி அணியை விட்டு செல்ல இருந்தார். நாங்கள் அப்போது எங்கள் மனநிலையை நேர்மறையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தோம். அடுத்து மெல்போர்னுக்கு சென்று வெற்றி பெற வேண்டும் என்று மட்டுமே யோசித்தோம். டெஸ்ட் தொடரை வெல்வது பற்றி அப்போது நாங்கள் சிந்திக்கவில்லை. நாங்கள் சிறிய இலக்குகளை மட்டுமே அடைய வேண்டும் என்று நினைத்தோம். ஒவ்வொரு போட்டியாக திட்டமிடலாம் என்று முடிவு செய்தோம்" என்று ஆஸ்திரேலிய தொடரை வென்றது குறித்து கூறினார் அஸ்வின்.
அதற்கு முன் 2018-19 ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. அடுத்து 2020-21 ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இன்னும் சில மாதங்களில் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல உள்ளது இந்திய அணி. இந்த முறை ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கி உள்ளது இந்திய அணி.