“உங்க பாட்ஷா இனியும் பழிக்காது”.. மைண்ட் கேம் ஆடிய ஸ்டீவ் ஸ்மித்.. அஸ்வின் தந்த தரமான பதிலடி
பெங்களூரு: இந்தியாவில் ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு அநியாயம் செய்யப்படுவதாக ஸ்டீவ் ஸ்மித் வைத்த குற்றச்சாட்டிற்கு சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தரமான பதிலடியை கொடுத்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நெருங்க நெருங்க அதுகுறித்த பேச்சுக்களும், வாக்குவாதங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன. 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் பிப்ரவரி 9ம் தேதியன்று நடைபெறுகிறது.
இதற்காக கடந்த 1ம் தேதியன்றே இந்தியாவுக்கு வந்துவிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் பெங்களூருவில் உள்ள கேஎஸ்சிஏ மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பயிற்சி போட்டி எதுவும் வேண்டாம் எனக்கூறிவிட்டனர்.

ஸ்மித்தின் குற்றச்சாட்டு
இதுதான் தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. பத்திரிகைக்கு பேட்டியளித்த நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித், 2017ம் ஆண்டு இந்தியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் போது பயிற்சிப்போட்டிக்காக பச்சை புற்கள் நிறைந்த பவுன்சர் பிட்ச் கொடுக்கப்பட்டது. ஆனால் நிஜ போட்டியின் போது முற்றிலும் மாறாக ஸ்பின்னுக்கு ஏற்ற பிட்ச்-கள் இருந்தது. இந்த முறையும் இந்தியாவிடம் நம்பிக்கையையும் நியாயத்தையும் எதிர்பார்க்க முடியாது எனக்கூறியிருந்தார்.

அஸ்வின் தந்த பதிலடி
இந்நிலையில் இதற்கு அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ஆஸ்திரேலியா பயிற்சி போட்டியில் விளையாடாதது புதிய விஷயம் ஒன்றும் அல்ல. இந்திய அணியும் தான் அயல்நாட்டு சுற்றுப்பயணங்களின் போது பயிற்சி போட்டிகளை ரத்து செய்திருக்கிறது. நிறைய போட்டிகள் அடுத்தடுத்து இருப்பதால் பயிற்சி போட்டிகளுக்கான நேரம் கிடைப்பதில்லை என்பது தான் உண்மை.

வேண்டுமென்றே செய்யல
2017ம் ஆண்டு பயிற்சி போட்டியில் பவுன்ஸிங் பிட்ச் கொடுக்கப்பட்டிருந்தது உண்மை தான். இதே போல நிஜ போட்டியின் போது புனே மைதானத்தில் ஏகபோகத்திற்கு பந்து ஸ்பின்னானது. ஆனால் இதை யாருமே இங்கு திட்டமிட்டு வேண்டுமென்றே செய்வது கிடையாது. இதே போல சாதாரணமாக நடக்கும் ஒரு சம்பவத்தை குற்றச்சாட்டாக கொண்டு வருவதும், எதிரணி வீரர்களை சீண்டுவதும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு புதிது கிடையாது.

ஆஸி, வீரர்களின் குணம்
ஒரு தொடர் தொடங்குவதற்கு முன்னதாக வீரர்களை தேவையின்றி சீண்டிப்பார்த்து அவர்களை மனதளவில் பலவீனப்படுத்தி வெற்றி பெறுவதில் ஆஸ்திரேலியர்கள் கைதேர்ந்தவர்கள். அதனை அவர்கள் விரும்பி செய்கின்றனர். தற்போதும் அதே போல தான் வேண்டுமென்றே இந்திய களங்கள் குறித்து குற்றச்சாட்டுக்களை கூறுவதாக கூறிவருவதாக அஸ்வின் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications