
சிஎஸ்கே அணி
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதன்மை தேர்வாக ரவீந்திர ஜடேஜாவை 16 கோடிக்கு தக்கவைத்தது. அவருக்கு பின்பு தான் தோனி தக்கவைக்கப்பட்டார். 3வது மற்றும் 4வது தேர்வுகளாக இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட், மொயீன் அலி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் மெகா ஏலம்
சிஎஸ்கே என்பது ஒரு குடும்பத்தை போன்றது என்ற கருத்து பலரிடமும் உள்ளது. அப்படிப்பட்ட அணியில் இருந்து முக்கிய வீரர்கள் இந்தாண்டு கழட்டிவிடப்பட்டுள்ளனர். எனவே அந்த அணி அடுத்தாண்டு யாரையெல்லாம் ஏலம் எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதில் அஸ்வின் கண்டிப்பாக இடம்பெறுவார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

அஸ்வினின் பயணம்
ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்தாண்டு ஐபிஎல் தொடர் வரை டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடி வந்தார். ஆனால் அவர் கழட்டிவிடப்பட்டார். இவர் ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2009 முதல் 2015 வரை 97 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 90 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். சமீபத்தில் இந்திய டி20 அணியில் இணைந்த அவர் விக்கெட் மழை பொழிந்து வருகிறார். இதனால் அவரை மடக்க சிஎஸ்கே முயலும்.

அஸ்வினின் பதில்
இந்நிலையில் இதுகுறித்து அஸ்வின் புது தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர், சிஎஸ்கே அணி எப்போதுமே என் மனதிற்கு நெருக்கமான ஒன்று தான். சிஎஸ்கே ஒரு பள்ளி மாதிரி. அதில் நான் எல்கேஜி, யுகேஜி, ஆரம்பக் கல்வி, இடைநிலை கல்வி, 10ஆம் வகுப்புவரை படித்திருக்கிறேன். அதன்பிறகு வேறு பள்ளிக்கு சென்றுவிட்டேன். உயர்கல்வியும் படித்தேன். அனைத்தையும் முடித்துவிட்டு, அனைவரும் வீட்டிற்கு தானே வந்தாக வேண்டும். அந்தவகையில் நானும் சிஎஸ்கேவுக்கு வருவதற்கு தான் விரும்புகிறேன். ஆனால், ஏலம்தான் அதனை தீர்மானிக்கும் எனக்கூறியுள்ளார். அவரின் இந்த கருத்தால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











