பெங்களூர்: துலீப் டிராபியில் இந்தியா பி அணிக்காக விளையாடி வரும் ஆந்திரா வீரர் நிதிஷ் குமார் ரெட்டியின் பவுலிங் சிறப்பாக இருப்பதாக இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். ஐபிஎல் தொடரிலேயே கவனம் ஈர்த்த நிதிஷ் குமார் ரெட்டி, துலீப் டிராபியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், விரைவாக இந்திய அணியில் இடம்பிடிக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரின் போது ஐதராபாத் அணிக்காக விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டியின் ஆட்டம் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. ஏனென்றால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட்ட நிதிஷ் குமார் ரெட்டி, வேகப்பந்துவீச்சாளராகவும் சிறப்பாக செயல்பட்டார். 21 வயதாகும் நிதிஷ் குமார் ரெட்டி 303 ரன்கள் விளாசியதோடு, பவுலிங்கிலும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை வழங்கி இருந்தார்.

இதனால் நிதிஷ் குமார் ரெட்டியை ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக கொண்டு வர வேண்டும் என்றும், அதற்கான பயிற்சியை என்சிஏவில் இருந்து தொடங்க வேண்டும் என்றும் விமர்சகர்கள் கூறி வந்தனர். இதனிடையே ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் நிதிஷ் குமார் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் பின்னர் காயம் காரணமாக அவர் விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இருப்பினும் துலீப் டிராபி தொடருக்கான இந்திய பி அணிக்காக நிதிஷ் குமார் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலமாக ஹர்திக் பாண்டியாவுக்கான மாற்று வீரரை பிசிசிஐ தேடி வருவதாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா பி அணி களமிறங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா பி அணி முஷீர் கானின் அபார சதத்தால் 321 ரன்களை எடுத்து ஆல் அவுட்டாகியது.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிதிஷ் குமார் ரெட்டி டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இருந்தாலும் நிதிஷ் குமார் ரெட்டியின் பவுலிங் எப்படி இருக்கும் என்று பார்க்கப்பட்டது. பின்னர் இந்தியா ஏ அணி பேட்டிங் செய்த நிலையில், நிதிஷ் குமார் ரெட்டி பவுலிங் செய்ய தொடங்கினார். 2வது நாள் முடிவில் மொத்தமாக 7 ஓவர்களை வீசிய நிதிஷ் குமார், 16 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். அதேபோல் 2 ஓவர்களை மெய்டனாக வீசி அசத்தினார்.
அவரது பவுலிங்கில் லைன் மற்றும் லெந்தில் சிறப்பாக இருந்ததோடு, அவரால் இன் ஸ்விங் செய்ய முடிந்ததை பார்க்க முடிந்தது. இந்த நிலையில் நிதிஷ் குமார் ரெட்டியின் பவுலிங்கை பார்த்த ரவிச்சந்திரன் அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில், இந்த நிதிஷ் குமார் ரெட்டியின் பவுலிங்கில் எல்லாம் சரியாக இருக்கு என்று பதிவிட்டுள்ளார். இதனால் நிதிஷ் குமார் ரெட்டி விரைவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு சோதனை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.