மொஹாலி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற பின், உடனடியாக ஆல்ரவுண்டர் அஸ்வின் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 276 ரன்கல் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் பின் களமிறங்கிய இந்திய அணி ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரின் அபார அரைசதத்தை அபார வெற்றியை பதிவு செய்தது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 10 ஓவர்கள் வீசி 47 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். குறிப்பாக சிறப்பாக ஆடி வந்த மார்னஸ் லபுஷேனின் விக்கெட்டை வீழ்த்தியதால், ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரும் கட்டுப்படுத்தப்பட்டது. அதேபோல் நேற்றைய போட்டியின் பந்துவீசிய இந்திய அணி பவுலர்களில் சிறந்த எகனாமியான 4.7-ஐ அஸ்வின் தான் வைத்துள்ளார்.
இதனால் அஸ்வினின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றது. ஆனாலும் நம்பர் 8 வீரராக விளையாடுவதால், அஸ்வினிடம் இருந்து இந்திய அணி நிர்வாகம் கூடுதலாக எதிர்பார்க்கிறது. பந்துவீச்சில் அஸ்வின் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார் என்றாலும், அக்சர் படேல் அளவிற்கு பேட்டிங்கில் சம்பவம் செய்வாரா என்று சந்தேகத்துடன் இந்திய அணி இருக்கிறது. அக்சர் படேல் அளவிற்கு சிக்சரை விளாச முடியாவிட்டாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் சிறந்த பேட்ஸ்மேன் என்பதையும் நிரூபித்துள்ளார்.
அதனை ஒருநாள் கிரிக்கெட்டிலும் நிரூபிக்க அஸ்வின் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பவுலிங் பயிற்சி மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் அஸ்வின் அதிக ஈடுபாட்டுடன் உள்ளார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான வெற்றிக்கு பின் வீரர்கள் அனைவரும் மைதானத்தில் இருந்து ஓய்வறை நோக்கி வந்த போது, ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டும் கால்களில் பேட் கட்டிக்கொண்டு பேட்டுடன் களமிறங்கினார். அனைவரும் எங்கு செல்கிறார் என்று பார்த்த நிலையில், உடனடியாக பேட்டிங் பயிற்சியை தொடங்கினார்.
அஸ்வின் ஈடுபாட்டை பார்த்த ரசிகர்கள் பலரும் நெகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேபோல் அஸ்வினின் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. ஐபிஎல் தொடரின் போது
மட்டுமே அஸ்வின் மாலை நேரங்களில் அதிகமாக பேட்டிங் செய்திருக்கிறார். இதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்டிங் செய்ய தயாராகும் வகையில் இரவு நேர ஃபிளட் லைட் வெளிச்சத்தில் அஸ்வின் பயிற்சி செய்ய விரும்பியதால், பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.