சென்னை: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பெற்ற வெற்றியில் ரவிச்சந்திரன் அஸ்வின் முக்கியப் பங்கு வகித்துள்ளார். பவர் பிளே, மிடில் ஓவர், டெத் ஓவர் என்று பந்துவீச்சின் அனைத்து பரபரப்பான நேரங்களிலும் பந்துவீசிய அஸ்வின், 25 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 அதிமுக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 175 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. தோனி மற்றும் ஜடேஜா களத்தில் இருந்த போதே, ராஜஸ்தான் அணி வெற்றிபெற்று சாதித்துள்ளது. இதற்கு அந்த அணியின் ஸ்பின்னர்கள் முக்கிய காரணமாக அமைந்துள்ளனர்.

நேற்றையப் போட்டியில் ராஜஸ்தான் அணி சார்பாக அனுபவம் வாய்ந்த ஸ்பின்னர்களான அஸ்வின் மற்றும் சாஹலின் சுழற்பந்துவீச்சு, அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக அஸ்வினின் பந்துவீச்சு ராஜஸ்தான் அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு போய் சேர்த்துள்ளது. ஏனென்றால் அஸ்வின் தனது 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ரஹானே மற்றும் ஷிவம் துபே ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதனைவிடவும் அவர் வீசிய ஓவர்கள் நேரம் சிக்கலானது என்பதுதான் கூடுதல் சுவாரஸ்யமானது.
ஏனென்றால் பவர்பிளேவின் கடைசி ஓவரில் அனைத்து அணிகள் அதிக ரன்களை சேர்க்க முயற்சிக்கும். சரியாக அஸ்வின் 6வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் 10 ரன்கள் அடிக்கப்பட்டாலும், மீண்டும் அட்டாக்கில் 10வது ஓவரில் தான் கொண்டு வரப்பட்டார். அப்போது வந்த அஸ்வின் ரஹானேவின் விக்கெட்டை வீழ்த்தியதோடு, வெறும் 4 ரன்கள் மட்டுமே அந்த ஓவரில் விட்டுக் கொடுத்தார். தொடர்ந்து விக்கெட் தேவை என்ற சூழலில், 12வது ஓவரில் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார்.

அப்போது அதிரடியாக ஆடும் திறமை கொண்ட ஷிவம் துபேவின் விக்கெட்டை எளிதாக தனது அறிவுப்பூர்வமான பந்துவீச்சின் மூலம் வீழ்த்தி காட்டினார். ஒரு பந்தை ஒய்டு லைனுக்கு அருகில் போட்ட அஸ்வின், எதிர்பாராத நேரத்தில் அதிக வேகத்துடன் அடுத்த பந்தை ஷிவம் துபே கால்களுக்கு திருப்பினார். இதனால் சென்னை அணி கூடுதல் அழுத்தத்திற்கு உள்ளானது. இதனைத் தொடர்ந்து, அஸ்வினின் கடைசி ஓவரை தோனிக்காக பாதுகாத்து வைத்தார் சஞ்சு சாம்சன்.
சரியாக தோனி உள்ளே வந்த முதல் ஓவரிலேயே அஸ்வினை அட்டாக் செய்ய கொண்டு வந்தார். வேறு எந்த பந்துவீச்சாளர் வீசி இருந்தாலும் ஒரு பவுண்டரியையாவது தோனி விளாச முயற்சித்திருப்பார். ஆனால், அந்த ஓவரில் அஸ்வினை அதிக கவனத்துடன் எதிர்கொண்ட தோனி, வெறும் 4 ரன்களை மட்டுமே சேர்த்தார். சேப்பாக்கம் மைதானத்தின் தன்மையை முழுமையாக அறிந்துள்ள அஸ்வினை, சரியான நேரத்தில் பயன்படுத்தி ராஜஸ்தான் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார். இது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. தான் ஒரு சேப்பாக்கம் கில்லி என்பதை மீண்டும் அஸ்வின் நிரூபித்துள்ளார்.