சிட்னி: இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானும், உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவருமான ரவிச்சந்திரன் அஸ்வின், ஆஸ்திரேலியாவின் பிரபலமான பிக் பாஷ் லீக் (BBL) டி20 தொடரில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். சிட்னி தண்டர் அணி, 15வது பிபிஎல் சீசனுக்காக அஸ்வினை ஒப்பந்தம் செய்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன் மூலம், பிக் பாஷ் லீக்கில் விளையாடும் மிகவும் பிரபலமான மற்றும் மூத்த இந்திய வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெறுகிறார்.
பிக் பாஷ் லீக் தொடரில் விளையாடும் முதல் இந்திய ஆண் வீரர் அஸ்வின் என்று பரவலாகப் பேசப்பட்டாலும், அந்தப் பெருமை இந்திய அண்டர் 19 அணியின் முன்னாள் கேப்டன் உன்முக்த் சந்த்-ஐ சாரும். அவர், இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, 2021-22 சீசனில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக விளையாடினார். தற்போது அவர் அமெரிக்காவிற்காக கிரிக்கெட் ஆடி வருகிறார்.
பிசிசிஐ விதிகளின்படி, ஐபிஎல் உட்பட இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெற்ற வீரர்கள் மட்டுமே வெளிநாட்டு டி20 லீக்குகளில் பங்கேற்க முடியும். அந்த வகையில், இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, பிக் பாஷ் லீக்கில் இணையும் இரண்டாவது இந்திய வீரர் மற்றும் மிகவும் பிரபலமான வீரர் அஸ்வின் ஆவார்.

அஸ்வின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும், கடந்த மாதம் ஐபிஎல் தொடரில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்தார். இந்த ஓய்வு முடிவுதான், வெளிநாட்டு லீக்குகளில் விளையாட அவருக்கு வழிவகுத்துள்ளது. 38 வயதான அஸ்வின், தனது 221 போட்டிகள் கொண்ட ஐபிஎல் பயணத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட ஐந்து அணிகளுக்காக விளையாடி 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சர்வதேச அரங்கில், 287 போட்டிகளில் 765 விக்கெட்டுகளை வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 537 விக்கெட்டுகளுடன் உலகின் 7வது முன்னணி பந்துவீச்சாளராகத் திகழ்கிறார்.
இந்த புதிய ஒப்பந்தம் குறித்துப் பேசிய அஸ்வின், "சிட்னி தண்டர் அணி, என்னை எப்படிப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தார்கள், என்னை விளையாட வைப்பதில் அளவிற்குத் தைரியமாகவும் இருந்தார்கள். அந்த அணியின் தலைவர்களுடன் நான் நடத்திய உரையாடல்கள் சிறப்பாக இருந்தன. டேவிட் வார்னர் விளையாடும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும், நமது கேப்டனும் நம்மைப் போலவே சிந்திப்பது எப்போதுமே நல்லது. தண்டர் ரசிகர்களுக்காக எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்றார்.
சிட்னி தண்டர் அணியின் பொது மேலாளர் ட்ரென்ட் கோப்லேண்ட் கூறுகையில், "அஸ்வின் சிட்னி தண்டர் அணியைத் தேர்ந்தெடுத்தது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. அவரது ஆர்வம், வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை ஆகியவை எங்களைக் கவர்ந்தன. தொடரின் நடுவில் அவரது உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சு அணிக்குப் புத்துணர்ச்சி அளிக்கும். ஒரு தலைவராகவும், வழிகாட்டியாகவும் இளம் வீரர்களுக்கு அவரது அனுபவம் விலைமதிப்பற்றது. மேற்கு சிட்னியில் வேகமாக வளர்ந்து வரும் இந்திய சமூகத்துடன் அஸ்வினின் இணைப்பு, எங்களுக்கு புதிய ரசிகர்களை உருவாக்கும்" என்றார்.
அஸ்வின், சிட்னி தண்டர் அணியில் டேவிட் வார்னர், லாக்கி ஃபெர்குசன், சாம் பில்லிங்ஸ் மற்றும் பாகிஸ்தானின் ஷதாப் கான் போன்ற நட்சத்திர வீரர்களுடன் இணைந்து விளையாட உள்ளார்.
வெஸ் அகர், டாம் ஆண்ட்ரூஸ், ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா), கேமரூன் பான்கிராஃப்ட், சாம் பில்லிங்ஸ் (இங்கிலாந்து), ஓலி டேவிஸ், லாக்கி ஃபெர்குசன் (நியூசிலாந்து), மத்தேயு கில்க்ஸ், கிறிஸ் கிரீன், ரியான் ஹாட்லி, ஷதாப் கான் (பாகிஸ்தான்), சாம் கோன்ஸ்டாஸ், நாதன் மெக்ஆண்ட்ரூ, பிளேக் நிகிதாராஸ், டேனியல் சாம்ஸ், தன்வீர் சங்கா, டேவிட் வார்னர்.