லக்னோ: இங்கிலாந்து அணிக்கு போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சொந்த மண்ணில் நடக்கும் உலகக்கோப்பையில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம் இந்திய அணி கிட்டத்தட்ட அரையிறுதி சுற்றில் ஒரு காலை வைத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய அணி அடுத்ததாக டிஃபெண்டிங் சாம்பியனான இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் நேற்றிரவு லக்னோ சென்றடைந்தனர். இந்த போட்டியில் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார் என்று பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் காயம் குணமடைய இன்னும் சில வாரங்களாகும் என்பதால், இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லக்னோ மைதான ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்திய அணியின் காம்பினேஷனில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆடிய அஸ்வின், அதன்பின் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் விளையாடி வந்தார்.

ஆனால் ஹர்திக் பாண்டியா காயமடைந்ததால், முகமது ஷமி மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் லக்னோ மைதானத்தில் நடக்கவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின் சேர்க்கப்பட்டால், எந்த வீரர் நீக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதில் அஸ்வின் சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது.