மும்பை: ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகியுள்ள நிலையில், அந்த இடத்திற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் நியமனம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ராஜஸ்தான் அணியில் பல்வேறு சர்ச்சைகள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன. முதலில் அந்த அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் விலகுவதாக தகவல் வெளியாகியது. அதனை அஸ்வினின் நேர்காணல் ஒன்றிலும் சஞ்சு சாம்சன் உறுதி செய்திருந்தார். இதன் மூலமாக சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியில் இருந்து விலக இருப்பது உறுதியாகியது.

இதற்கு ராஜஸ்தான் அணியின் நிர்வாகிகளே காரணம் என்றும், சஞ்சு சாம்சனின் முடிவுகளுக்கு உரிய மரியாதை இல்லாததுமே காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விலகுவதாக அறிவித்துள்ளார். ராஜஸ்தான் அணியில் ஓராண்டு மட்டுமே ராகுல் டிராவிட் பயிற்சியாளராக பணியாற்றினார்.
ஆனால் ஒரு சீசன் முடிவிலேயே ராகுல் டிராவிட் விலகி இருப்பது பல்வேறு கேள்விகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே சங்கக்காரா சிறப்பாக செயல்பட்ட போதும், அவர் ஓரங்கட்டப்பட்டு ராகுல் டிராவிட் கொண்டு வரப்பட்டார். இதனால் சங்கக்காரா மீண்டும் அந்த பொறுப்புக்கு கொண்டு வரப்படுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இதனிடையே சங்கக்காராவுடன் கேகேஆர் அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ளார். அஸ்வின் ஓய்வை அறிவித்த 2 நாட்களிலேயே ராகுல் டிராவிட் விலகல் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இதனால் ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அஸ்வின் நியமனம் செய்யப்பட உள்ளாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஏற்கனவே ராஜஸ்தான் அணிக்காக 3 ஆண்டுகள் அஸ்வின் ஆடி இருக்கிறார். அவரை வாங்குவதற்காக கடந்த மெகா ஏலத்தில் ராஜஸ்தான் அணி தீவிரமாக போராடியது. ராஜஸ்தான் அணி நிர்வாகிகளுக்கும், அஸ்வினுக்கும் நல்ல உறவு இருந்து வருகிறது.
அங்குள்ள சூழல், வீரர்கள் என்று அனைவருடனும் அஸ்வினுக்கு நல்ல உறவு இருந்து வருகிறது. ஏற்கனவே டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் அணியின் பயிற்சியாளர் மற்றும் கேப்டனாக அஸ்வின் செயல்பட்டு வருகிறார். இதனால் அடுத்ததாக ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக களமிறங்க வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.