மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் அஸ்வினுக்கு இடம் அளிக்கப்படாது என சிஎஸ்கே வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. கேப்டன் தோனி, அஸ்வினுக்கு இனி பிளேயிங் லெவனில் வாய்ப்பு அளிக்க மாட்டார் எனக் கூறப்படுகிறது.
கடந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்ற நிலையில், அப்போது பேசிய தோனி, சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு தற்போது சமநிலையில் இருப்பதாகக் கூறினார். அந்தப் போட்டியில் அஸ்வின் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அஸ்வினுக்குத் தாங்கள் அதிக அழுத்தத்தைக் கொடுத்துவிட்டதாகவும், அவரை பவர் பிளேவில் இரண்டு ஓவர்கள் பந்து வீசவைத்ததாகவும் சுட்டிக்காட்டி இருந்தார். இதன் மூலம், சூசகமாக அஸ்வினுக்கு இனி சிஎஸ்கே அணியில் இடம் இல்லை என்பதைத் தோனி அவ்வாறு சொல்லி இருக்கிறார் என அப்போதே பலரும் சுட்டிக்காட்டி வந்தனர்.
தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கலாம். மும்பை வான்கடேயில் வேகப்பந்து வீச்சுக்கு அதிக ஒத்துழைக்கும் என்பதால், சிஎஸ்கே அணி கூடுதல் வேகப்பந்துவீச்சாளரை தேர்வு செய்யும்.
அதன்படி, நூர் அகமது மற்றும் ரவீந்திர ஜடேஜா மட்டுமே சிஎஸ்கே அணியில் சுழற்பந்துவீச்சாளர்களாக இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது எனவே, இந்தப் போட்டியில் அஸ்வினுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு இல்லை. இனி வரும் போட்டிகளிலும் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான்.
ஒருவேளை மாற்று சுழற்பந்து வீச்சாளர்கள் தேவை என்றால், சிஎஸ்கே அணியில் ஸ்ரேயாஸ் கோபால் மற்றும் கமலேஷ் நாகர்கோடி ஆகியோர் உள்ளனர். அவர்கள் இருவரும் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் பல அணிகளுக்காக ஆடிய அனுபவம் உடைய பந்துவீச்சாளர்கள். எனவே, அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
இதையடுத்து, அஸ்வின் தனது கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாடிவிட்டாரா? இனி அவருக்கு ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.