சென்னை: 17 ஆண்டுகளுக்கு முன் ஐபிஎல் தொடரில் நடந்த 'ஸ்லாப்கேட்' சர்ச்சை, லலித் மோடியால் சமீபத்தில் வீடியோவாக வெளியிடப்பட்டு மீண்டும் பூதாகரமாகியுள்ளது. ஸ்ரீசாந்த்தின் மனைவி, ஹர்பஜன் சிங் எனப் பலரும் இதற்கு எதிர்வினையாற்றி வரும் நிலையில், இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், 'இது மீண்டும் மீண்டும் எழும் அனகோண்டாவின் தலை' என்று கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி, 2008-ல் ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த்தை கன்னத்தில் அறைந்த வீடியோவை வெளியிட்டதுதான் இந்த சர்ச்சைக்கு மூல காரணம். இதற்கு ஸ்ரீசாந்த்தின் மனைவி புவனேஷ்வரி, 'இது மனிதாபிமானமற்ற, கொடூரமான செயல்' எனக் கொந்தளித்திருந்தார். ஆனால், லலித் மோடியோ, 'நான் உண்மையைத் தான் பேசினேன், அவர் ஏன் கோபப்படுகிறார் என்று தெரியவில்லை' என்று பதிலளித்திருந்தார்.

இந்நிலையில், இந்தச் சர்ச்சை குறித்து தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள அஸ்வின், "இது மீண்டும் மீண்டும் எழும் அனகோண்டாவின் தலை போல, தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. இந்த நவீன காலத்தில் வீடியோக்களும், பதிவுகளும் எங்கும் நிறைந்துள்ளன. அந்தச் சம்பவம் ஹர்பஜன், ஸ்ரீசாந்த் இருவருக்குமே ஒரு பெருமையான தருணம் அல்ல. அதைப் பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை" என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "அந்தச் சம்பவம் முடிந்துவிட்டது. அதைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஹர்பஜன் கூட நமது நிகழ்ச்சிக்கு வந்து அதுகுறித்து எப்படி உணர்ந்தார் என்று பேசியிருக்கிறார். ஆம், நீங்கள் ஒரு தவறு செய்துவிட்டீர்கள், அதனுடன் உங்கள் வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டியிருக்கும். ஆனால், அதிலிருந்து நாம் முன்னோக்கிச் செல்லவும் வேண்டும். இந்த விஷயத்தை எவ்வளவு குறைவாகப் பேசுகிறோமோ, அவ்வளவு நல்லது. தவறு செய்தவர்கள், அதிலிருந்து முன்னோக்கிச் செல்ல ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது, அதை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றும் அஸ்வின் அறிவுரை கூறியுள்ளார்.
இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், சில மாதங்களுக்கு முன்பு அஸ்வினின் யூடியூப் சேனலிலேயே பேசிய ஹர்பஜன் சிங், 'என் வாழ்க்கையிலிருந்து ஒரு சம்பவத்தை அழிக்க வேண்டும் என்று நினைத்தால், அது இந்த ஸ்லாப்கேட் சம்பவமாகத்தான் இருக்கும்' என்று தனது வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார். இந்நிலையில், சம்பந்தப்பட்டவர்களே முன்னோக்கிச் செல்ல விரும்பும் ஒரு விஷயத்தை, மீண்டும் மீண்டும் கிளறுவது சரியா என்று அஸ்வின் கேள்வி எழுப்பி உள்ளார்.