லக்னோ: ரிஷப் பண்ட், மன்கட் விக்கெட் முறையீட்டை நடுவரிடமிருந்து திரும்பப் பெற்ற விவகாரத்திற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் மன்கட் செய்த பந்துவீச்சாளரை அவமானப்படுத்தி விட்டதாகவும், இப்படி செய்தால் அந்தப் பந்துவீச்சாளர் எப்படி மீண்டும் மன்கட் முறையில் விக்கெட் எடுக்க முயற்சி செய்வார்? என அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜிதேஷ் சர்மாவை மன்கட் முறையில் அவுட் செய்ய முயன்ற திக்வேஷ் ரதியை ரிஷப் பண்ட் அவமானப்படுத்தி விட்டதாகவும் அஸ்வின் குற்றம் சுமத்தியிருக்கிறார். ரிஷப் பண்ட் ஏன் அந்த முடிவை எடுத்தார்? என்ன நடந்தது? அஸ்வின் என்ன சொன்னார்? என்று பார்க்கலாம்.

2025 ஐபிஎல் தொடரின் கடைசி லீக் சுற்று ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 228 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடிக்கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் 19 பந்துகளுக்கு 29 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருந்தது. அப்போது ஜிதேஷ் சர்மா அதிரடியாக ஆடி வந்தார். அவரது விக்கெட்டை எடுக்க வேண்டிய கட்டாயத்திலிருந்தது லக்னோ அணி.
அப்போது லக்னோ அணியின் சுழற்பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதி தான் பந்து வீச ஓடிவரும்போது ஜிதேஷ் சர்மா கிரீஸை விட்டு முன்னேறுவதைப் பார்த்தார். எனினும், தான் பந்து வீசி முடிக்கும் நிலையில் தான் அவரை ரன் அவுட் செய்ய முடிவு செய்தார். ஜிதேஷ் சர்மா இரண்டு அடிகள் முன்னே சென்ற நிலையில், அவரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். பின்னர் நடுவரிடம் அவுட் கேட்டு முறையிட்டார் திக்வேஷ்.
பின்னர் மூன்றாவது நடுவரிடம் இது குறித்த ரிவ்யூ சென்றது. பொதுவாக மன்கட் முறையில் ரன் அவுட் செய்வது கிரிக்கெட் விளையாட்டுத் தர்மத்திற்கு எதிரானது என்ற ஒரு பார்வை உள்ளது. பெரும்பாலான கேப்டன்கள் இது போன்ற சம்பவம் நடந்தாலும் அவுட் கேட்டு முறையிட மாட்டார்கள்.
அதன்படி இந்த சம்பவத்தின் போதும் மூன்றாவது நடுவர் ரிவ்யூ செய்து கொண்டிருந்தபோது, லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தான் இந்த அவுட் முறையீட்டை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். எனினும், அதற்குள் மூன்றாவது நடுவரும் அதை ஆய்வு செய்தார்.
அவர், திக்வேஷ் ரதி பந்து வீசி முடிக்கும் நிலையில் தான் ரன் அவுட் செய்ததாகவும், அப்போது ஜிதேஷ் கிரீஸுக்கு உள்ளே இருந்ததாக கூறினார். விதிப்படி பந்து வீசி முடிக்கும் முன்பே ரன் அவுட் செய்ய வேண்டும். அப்போது பேட்ஸ்மேன் முன்னே சென்றார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. அதன்படி திக்வேஷ் ரதி செய்தது ரன் அவுட் இல்லை என தீர்ப்பு வெளியானது.
அதே சமயம், ரிஷப் பண்ட்டும் தனது முறையீட்டை பின்வாங்கியதால் அதை பலரும் பாராட்டி வந்தனர். கிரிக்கெட் தர்மப்படி கேப்டன் ரிஷப் பண்ட் நடந்து கொண்டார் என ரசிகர்கள் கொண்டாடினர். ஆனால், ரவிச்சந்திரன் அஸ்வின் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் முதன்முறையாக ரவிச்சந்திரன் அஸ்வின் இதே போல மன்கட் முறையில் ரன் அவுட் செய்திருந்தார். அப்போது தான் விதிப்படி ரன் அவுட் செய்ததாக அஸ்வின் தனது வாதத்தை முன்வைத்தார். ஆனால், கிரிக்கெட் உலகில் பலரும் அவரை விமர்சித்து வந்தனர். அப்போது முதல் இது மிகப்பெரிய விவாதமாகவே உள்ளது.
இந்த நிலையில், மன்கட்டுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வரும் அஸ்வின், ரிஷப் பண்ட் அவுட் முறையீட்டை திரும்பப் பெற்றது பற்றி பேசுகையில், "ரிஷப் பண்ட் மன்கட் முறையில் செய்த ரன் அவுட் முறையீட்டை திரும்பப் பெற்றது திக்வேஷ் ரதிக்கு அவமானம். அந்தப் பந்துவீச்சாளர் கூனிக்குறுகிப் போயிருப்பார். இனி இதுபோல ரன் அவுட் செய்ய முயற்சிக்க மாட்டார். ஏன் அதை அவர் மீண்டும் செய்யக்கூடாது?
இது விதி சார்ந்த ஒரு விஷயம். பேட்ஸ்மேன் தனக்கு இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி கூடுதலாக ஒரு அடி முன்னே செல்கிறார். அதன் மூலம் இரண்டு ரன்களை வேகமாக ஓட முயற்சி செய்கிறார். இங்கே அவர் அவுட் ஆனாரா? இல்லையா? என்பது விஷயம் இல்லை. கேப்டன் அந்த முறையீட்டை திரும்பப் பெற்றாரா? இல்லையா? என்பதுதான் விஷயம். இங்கே நாம் கிரிக்கெட் ஆட்டத்தைப் பற்றி மட்டும் சில வினாடிகள் பேசுவோம்.
விதிப்படி இந்த முடிவு மூன்றாவது நடுவருக்குச் சென்றது. நடுவர் 'நாட் அவுட்' என்று சொன்னார். அப்படி என்றால் இது 'நாட் அவுட்' தான். இதில் அந்த முறையீட்டை திரும்பப் பெறுவதற்கான அவசியமே இல்லை. ஒருவேளை ஜிதேஷ் சர்மா 'அவுட்' என தீர்ப்பு வந்திருந்தால், பந்துவீச்சாளர் தான் பந்து வீசி முடிக்கும் முன்பாகவே அவர் தனது கால்களை எடுத்து வெளியே வைத்திருந்தால் இது 'அவுட்' என தீர்ப்பாக இருந்திருக்கும்.
அப்போதும் பந்துவீச்சாளர் பக்கமே நியாயம் இருந்திருக்கும். ஆனால் இது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் அந்த அணியின் ரசிகர்கள் பார்வையில் மோசமான விஷயமாக இருந்திருக்கும். அவர்கள் ரதி மற்றும் ரிஷப் பண்ட்டை விரும்பி இருக்க மாட்டார்கள்," இவ்வாறு அஸ்வின் பேசியிருக்கிறார்.