பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் பிளேயிங் லெவனில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று நடந்த பயிற்சியின் போது ரவிச்சந்திரன் அஸ்வின் நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
சக சுழற் பந்துவீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தரை காட்டிலும் அஸ்வின் அதிக நேரம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் அஸ்வினுக்கு பவுன்சர் பந்துகளை வீசினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

இதை அடுத்து அஸ்வின் மூன்றாவது போட்டியில் விளையாடுவார் என தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே இந்தியா அணியில் ஒரே சுழற் பந்துவீச்சாளராக பிளேயிங் லெவனில் இடம் பெற்றார். அடுத்து அடிலெய்டு மைதானத்தில் நடந்த பகல் இரவு டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டார்.
அவருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம் பெற்று ஆடினார். அடிலெய்டு போட்டியில் அஸ்வின் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்திய நிலையில் அவருக்கு மூன்றாவது போட்டிக்கான அணியில் இடம் கிடைக்காது என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என நம்பப்பட்டது.
ஆனால், தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்றாவது போட்டியிலும் ஆட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொடரில் மொத்தம் ஐந்து போட்டிகள் இருக்கும் நிலையில் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதன் முடிவில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் 1 - 1 என சமநிலையில் உள்ளன. இந்த தொடரை கைப்பற்றவும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறவும் அடுத்த மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்திய அணி.
பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் டிசம்பர் 14 அன்று மூன்றாவது போட்டி துவங்க உள்ளது. இந்தப் போட்டி நடைபெற உள்ள ஐந்து நாட்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் போட்டி முழுமையாக நடக்குமா? அல்லது டிரா ஆகுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.