சென்னை: வெளிநாட்டுத் தொடர்களில் தனக்கு நடந்த ஒரு மோசமான விஷயத்தை சுட்டிக் காட்டி அதுதான் தனது ஓய்வு முடிவுக்கு காரணம் என இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின், வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், அஸ்வினின் 'குட்டி ஸ்டோரீஸ்' யூடியூப் தொடரில் சமீபத்தில் விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த உரையாடலின் போது, 2024 டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியின் போது, திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததற்கான பின்னணியை அஸ்வின் விளக்கினார்.

இந்த முடிவு குறித்து டிராவிட் கேட்டபோது, அஸ்வின் கூறியதாவது: "வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களுக்குச் சென்று, பெரும்பாலான போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் வெளியே உட்கார வேண்டிய நிலை எனக்கு மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இது அணிக்கு பங்களிக்க விரும்பாததால் எடுத்த முடிவு அல்ல. மாறாக, 'இங்கே சும்மா உட்கார்ந்திருப்பதற்குப் பதிலாக, வீட்டில் என் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கலாமே, அவர்களும் வளர்ந்து வருகிறார்கள், நான் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன்?' என்ற எண்ணம் எனக்குள் ஆழமாக எழுந்தது" என்றார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையுடன் ஓய்வு பெற்ற அஸ்வின் (537 விக்கெட்டுகள்), தனது 34 அல்லது 35 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று முன்பே திட்டமிட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார். "என் மனதில், நான் 34-35 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று எப்போதுமே முடிவு செய்திருந்தேன்," என்று அவர் கூறினார்.
இந்த முடிவு எந்தவிதமான தனிப்பட்ட விரோதத்தாலும் எடுக்கப்படவில்லை, முற்றிலும் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்ற தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலேயே எடுக்கப்பட்டது என்பதை அஸ்வின் தெளிவுபடுத்தினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட விரும்புவதாகவும், அது தனது குடும்ப வாழ்க்கைக்கு ஏற்ற நேரத்தை கொடுக்கும் என்றும் அவர் கூறினார். இந்த உரையாடலின்போது, சில சமயங்களில் விளையாட்டிலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொள்வது, அதன் மீதான ஆர்வத்தை மீண்டும் தூண்டும் என்று ராகுல் டிராவிட் குறிப்பிட்டார். அஸ்வினும் அதை ஒப்புக்கொண்டார்.