சென்னை: இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் பெயரை சென்னையில் ஒரு சாலைக்கு வைக்க சென்னை மாநகராட்சி மாமன்றம் முடிவு செய்துள்ளது. இந்திய நாட்டுக்கும், தமிழ்நாட்டுக்கும் தனது கிரிக்கெட் சாதனைகள் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் பெருமை சேர்த்து இருக்கிறார்.
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளுக்கும் அதிகமாக வீழ்த்தி அசாதாரண சாதனையை அஸ்வின் செய்தார். அவர் கடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் இடையே தனது சர்வதேச கிரிக்கெட் போட்டி ஓய்வை அறிவித்தார். தற்போது ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாட இருக்கிறார்.

இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் நிறுவனமான கேரம் பால் ஈவண்ட் அண்ட் மார்க்கெட்டிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட் சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை ஒன்றை வைத்து இருந்தது. ஆரிய கவுடா சாலை அல்லது அஸ்வினின் சொந்த வீடு இருக்கும் சாலைக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் சாலை என பெயரிட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
அந்த கோரிக்கை குறித்த ஆய்வுக்குப் பிறகு சென்னை மாநகராட்சி மாமன்றம் ராமகிருஷ்ணாபுரம் முதல் தெருவுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் சாலை என பெயரிட முடிவு செய்து இருக்கிறது. இந்த சாலை சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ளது.
இதை அடுத்து பலரும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். விரைவில் அந்த சாலைக்கு அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்து அறிவிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாட இருக்கிறார். சுமார் பத்து ஆண்டுகளுக்கு பிறகு அவர் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பி இருப்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
செய்தி சுருக்கம்: