சென்னை: இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் பின்பற்றி வரும் பேஸ்பால் ஸ்டைலை இந்திய அணி பின்பற்றினால் என்ன நடக்கும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
அண்மை காலமாக இங்கிலாந்து அணியின் அட்டாக் பாணியிலான பேஸ் பால் கிரிக்கெட் ஸ்டைல் ஆட்டம் இளம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. எத்தனை ரன்களில், எத்தனை விக்கெட்டுகள் பறிபோயிருந்தாலும், அடுத்தடுத்து வரும் வீரர்கள் எதையும் பற்றியும் கவலைப்படாமல் பேட்டை சுழற்றுவது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கிறது. அதில் சில பின் விளைவுகளை சந்தித்தாலும், பெரும்பாலான போட்டிகளில் இங்கிலாந்து வெற்றிபெற்று அசத்தியுள்ளது.

அண்மையில் முடிந்த ஆஷஸ் தொடர் 2-2 என்ற முடிவடைந்திருந்தாலும், மழை மட்டும் இல்லையென்றால் இங்கிலாந்து அணி எளிதாக கோப்பையை வென்றிருக்கும் என்று ஆஸ்திரேலிய வீரர்களே ஒப்புக் கொள்வார்கள். அந்த அளவிற்கு முன்வைத்த காலை பின் வைக்காமல் இங்கிலாந்து வீரர்கள் பேஸ் பால் ஸ்டைலை பின்பற்றி வருகிறார்கள். அதற்கு அணி நிர்வாகம் மட்டுமல்லாமல் தேர்வுக் குழுவினர், ரசிகர்கள் அனைவரும் ஆதரவாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பேஸ் பால் பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட் சிறப்பாக ஆடி வரும் ஒரு சில அணிகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் இந்திய அணி தற்போது மாற்றத்திற்கு தயாராகி வருகிறது. அந்த மாற்றம் நடக்கும் காலங்கள் எளிதாக இருக்கப் போவதில்லை. நிச்சயம் இங்கொன்றும், அங்கொன்றுமாக பிரச்சனைகள் இருக்கும். ஏராளமான ரசிகர்கள் இந்தியாவும் இங்கிலாந்து பாணியில் பேஸ் பால் ஸ்டைலில் விளையாட வேண்டும் என்று கருத்து சொல்கிறார்கள்.

ஒரு பேச்சிற்கு இந்தியா பேஸ் பால் ஸ்டைலில் களமிறங்குகிறது என்று வைத்துக் கொள்வோம். இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்கை போல் இந்திய வீரர் யாரோ ஒருவர் பேட்டை சுழற்றி விக்கெட்டை பறிகொடுத்தார் என்ன நடக்கும்? அப்போது பேஸ் பால் ஸ்டைலையும், வீரர்களையும் ஆதரிப்போமா? நிச்சயம் ஆதரிக்க மாட்டோம். பிளேயிங் லெவனில் இருந்து 4 வீரர்களையாவது வெளியில் அமர வைப்போம். அப்படிதான் நமது கிரிக்கெட் கலாச்சாரம் இருந்து வருகிறது.
இந்திய அணியால் வேறு எந்த ஸ்டைலிலும் கிரிக்கெட்டை விளையாட முடியாது. இங்கிலாந்து அணிக்கு பேஸ் பால் சரியாக இருப்பதற்கு அணி நிர்வாகம் ஒவ்வொரு வீரருக்கும் பயிற்சியாளருக்கும், கேப்டனுக்கும் ஆதரவாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணியின் ஒவ்வொரு அசைவுகளையும் ரசிகர்கள் கண்டு உற்சாகம் கொள்கிறார்கள். ஆனால் நமது ரசிகர்கள் இன்னும் பக்குவப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.