சென்னை: ஒரு காலத்தில் ஜாம்பவான்களாலும், வெற்றி தேடித் தரும் வீரர்களாலும் நிரம்பி இருந்த பாகிஸ்தான் அணி தற்போது வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்ததை சுட்டிக்காட்டி பேசி இருக்கிறார் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். பாகிஸ்தான் அணி கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட்டில் சரிவை சந்தித்து வருகிறது.
2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. அப்போது முதல் அந்த அணியின் சரிவு தொடங்கியது. அதன் பின் பாகிஸ்தான் அணிக்கு ஒவ்வொரு தொடரிலும் தோல்வியே பரிசாக கிடைத்து வருகிறது. 2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பை ஆகியவற்றில் முதல் சுற்றுடன் பாகிஸ்தான் வெளியேறியது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் படுமோசமான தோல்விகளை சந்தித்து இருக்கிறது.

அதிலும் தனது சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்திற்கு எதிராக டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்து இருக்கிறது. இதுவரை பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெற முடியாத வங்கதேசம், இப்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 0 என கைப்பற்றி பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து இருக்கிறது. 2021 மார்ச் மாதத்தில் இருந்து பாகிஸ்தான் அணி தனது சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.
இது குறித்து பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், பாகிஸ்தான் அணி ஒரு காலத்தில் ஜாம்பவான் வீரர்களால் நிரம்பி இருந்தது. ஆனால், அந்த அணியின் தற்போதைய நிலை ஏமாற்றமாக இருப்பதாக தெரிவித்தார். "வங்கதேசத்துக்கு அற்புதமான வெற்றி இது. ஆனால், பாகிஸ்தான் அணிக்கு இது ஏமாற்றமாக அமைந்தது. முன்பு பாகிஸ்தான் எளிதில் வீழ்த்தக்கூடிய அணியாக இருக்காது. ஆனால் இப்போது அவர்களின் ஆதிக்கம் முடிந்து விட்டது. கடந்த 1000 நாட்களாக சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணியால் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை." என்றார் அஸ்வின்.
மேலும், "பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான்களுக்காக நான் கவலை கொள்கிறேன். இம்ரான் கான், வக்கார் யூனிஸ், சோயப் அக்தர், வாசிம் அக்ரம், சயீது அன்வர், இன்சமாம் உல் ஹக், சலீம் மாலிக் என அந்த அணியின் ஜாம்பவான் வீரர்களின் பெயர்களை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். அவர்கள் அந்த அணிக்கு வெற்றி தேடி கொடுத்தவர்கள். வங்கதேசம் மிக நீண்ட நெடிய கிரிக்கெட் பயணத்தை மேற்கொண்டு வென்றுள்ளது. அவர்கள் நல்ல தரமான டெஸ்ட் அணியாக இருக்கிறார்கள். கடந்த ஆண்டு அவர்களுக்கு எதிராக நாங்கள் விளையாடினோம். வங்கதேசம் அற்புதமாக மாறி உள்ளது. முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹாசன் என அனைவரும் அணிக்காக தங்கள் பங்களிப்பை அளித்தார்கள். இளம் வீரர்களும் தேவையான நேரத்தில் செயல்பட்டார்கள்." என்றார் அஸ்வின்.
மேலும், "பாகிஸ்தான் அணியில் மிஸ்பா உல் ஹக், யூனிஸ் கான் என ஜாம்பவான்கள் அப்போது இருந்தார்கள். யாசிர் ஷா, அப்துல் ரகுமான், ஜூல்பிகர் பாபர் ஆகியோர் அந்த அணிக்காக பங்களிப்பை செய்து இருக்கிறார்கள். ஆனால், பாகிஸ்தான் அணி இப்போது எங்கே இருக்கிறது என்று பார்த்தால், அதை என்னால் நம்ப முடியவில்லை." என்றார் ரவிச்சந்திரன் அஸ்வின்.