ஆறு விக்கெட் அள்ளினார்
கவுன்டி சாம்பியன்ஷிப் தொடரில் சர்ரே அணிக்கு எதிரான போட்டியில் நாட்டிங்ஹாம் அணியின் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. அதிலும் அஸ்வின் தனியாளாக சர்ரே அணியை நிலை குலைய வைத்தார். அந்த அணியின் முதல் நான்கு பேட்ஸ்மேன்களை வரிசையாக வீழ்த்தினார். சர்ரே அணியின் முதல் இன்னிங்க்ஸில் ஆறு விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
சர்ரே திணறல் ஆட்டம்
மற்றொரு பந்துவீச்சாளர் பாட்டர்சன் அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்கள் வீழ்த்தினார். சர்ரே அணி 240 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அஸ்வினின் அபார ஆட்டத்தால் அவருக்கு இந்திய அணியில் உறுதியாக இடம் கிடைக்க வழி வகுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
டெஸ்ட் அணியில் இடம்
அஸ்வின் கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது பாதியிலேயே காயம் அடைந்ததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதில் அணியில் இடம் பிடித்த குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசியதால், அவர் தான் இனி டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி சார்பாக விளையாடுவார் என கூறப்பட்டது. அதனால், அஸ்வின் இனி இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெறுவாரா? என்பது சந்தேகமான நிலையில் தான் இருக்கிறது.
குல்தீப், ஜடேஜா
இந்திய டெஸ்ட் அணியில் இனி குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தான் இடம் பெறுவார்கள். அஸ்வினுக்கு இடம் கிடைப்பது கடினம் என்ற சூழ்நிலையில், அவர் ஆறு விக்கெட்கள் எடுத்து தன் பார்மை நிரூபித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்
இந்தியா அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது. அந்த தொடரில் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்திய அணி நிர்வாகம்.