கவுகாத்தி: இந்திய அணியின் அனுபவ வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங் பயிற்சியின் போது ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை விளையாட முயற்சித்த சம்பவம் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஃபீவர் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அக்.5ஆம் தேதி தொடங்கும் உலகக்கோப்பை தொடர், நவ.19ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. அதேபோல் உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுடன் இந்திய அணி பயிற்சி போட்டியில் களமிறங்க உள்ளது.

இதனிடையே உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கடைசி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. ஸ்பின் ஆல்ரவுண்டரான அக்சர் படேல் நீக்கப்பட்டு ஆஃப் ஸ்பின்னரான அஸ்வின் சேர்க்கப்பட்டார். இந்த முடிவு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இருப்பினும் 3வது ஸ்பின்னருக்கான ரேஸில் அக்சர் படேல், அஸ்வின் மட்டுமல்லாமல் வாஷிங்டன் சுந்தர் மற்றும் சாஹல் ஆகியோரும் இருந்தனர்.
இதில் நம்பர் 8 வீரருக்கான தேடல் இருந்ததால், சாஹலை இந்திய அணி நிர்வாகம் மொத்தமாக கழற்றிவிட்டது. இதனால் அக்சர் படேல், அஸ்வின் மற்றும் சுந்தர் மூவருக்குமான போட்டியாக மாறியது. இந்த மூவரில் பேட்டிங்கில் ஹிட்டிங் திறன் குறைந்த பேட்ஸ்மேனாக அஸ்வின் தான் இருக்கிறார். அஸ்வினை விடவும் சுந்தர் மற்றும் அக்சர் படேல் ஆகியோரால் எளிதாக பவுண்டரியை விளாச முடியும்.
இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி முடிவடைந்த பின் உடனடியாக அஸ்வின் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். அதன்பின் அஸ்வினின் அனுபவத்தை கணக்கிட்டு இந்திய அணி நிர்வாகம் அஸ்வினை தேர்வு செய்தது. இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி போட்டியில் விளையாட இந்திய அணி கவுகாத்தியில் முகாமிட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றைய நாளின் பயிற்சியின் போது இந்திய அணியின் அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் அஸ்வின் தனது பேட்டிங் பயிற்சியின் போது ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை விளையாட முயற்சித்துள்ளார். அந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.