"சிஎஸ்கே-வை விட்டுப் போனால் அசுரனாக மாறுவார்".. சிவம் துபே பேட்டிங் பற்றி அஸ்வின் வார்னிங்
சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை டிரேட் மூலம் அணிக்குள் கொண்டுவர, சிவம் துபேவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடுவிப்பது மிகப்பெரிய தவறாக முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் எச்சரித்துள்ளார்.
கடந்த 2026 ஐபிஎல் சீசனில் சிவம் துபே 9 இன்னிங்ஸ்களில் 203 ரன்கள் மட்டுமே எடுத்து, ஃபீல்டிங்கிலும் சில கேட்சுகளைத் தவறவிட்டு சுமாராகச் செயல்பட்டார். ஆனால், அவர் வேறு அணிக்கு சென்றால் அபாரமாக ஆடுவார் என அஸ்வின் கூறி உள்ளார்.

தனது யூடியூப் சேனலில் இதுகுறித்து பேசிய அஸ்வின், "சிஎஸ்கே அணியில் சில வீரர்கள் எப்போதுமே குறைவாகவே மதிப்பிடப்படுகிறார்கள். சிவம் துபேவை சிஎஸ்கே அணி விடுவித்தால், அவர் வேறு அணிக்குச் சென்று அசுரன் போல ஆடுவார். நீண்ட தூரத்திற்கு சிக்ஸர்களைப் பறக்கவிடும் திறன் கொண்ட இடதுகை பேட்டரான அவர், இந்திய கிரிக்கெட்டில் மிக அரிதாகக் கிடைக்கும் ஒரு வீரர்" என்றார்.
மேலும், ஹர்திக் பாண்டியாவை வாங்குவதற்காக சிவம் துபே, கலீல் அகமது மற்றும் அன்ஷுல் கம்போஜ் ஆகியோரை சிஎஸ்கே விட்டுக்கொடுக்க முன் வந்துள்ளது என்ற வதந்திகள் குறித்துப் பேசிய அவர், "மும்பை இந்தியன்ஸ் அணி தங்களின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவை விட்டுக் கொடுக்கும்போது, பதிலுக்கு சிஎஸ்கேவின் முக்கிய பந்துவீச்சாளர்களை பெறவே பார்க்கும். கலீல் அகமது ஏற்கனவே அணியில் இருந்து விடுவிக்கக் கோரியதாகக் கூறப்படுகிறது. இந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை இழந்தால், சிஎஸ்கே அணியால் வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே வைத்து சமாளிப்பது கடினம்" என்றார்.
ஒருவேளை இந்த டிரேட் நடந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வெளியேறினால், சேப்பாக்கம் மைதானத்திற்கு ஏற்ற ஜோஷ் டங், சோனி பேக்கர், நாதன் எல்லிஸ் போன்ற வெளிநாட்டு பந்துவீச்சாளர்களையும், சாய் கிஷோர் போன்ற தரமான இந்திய சுழற்பந்து வீச்சாளரையும் சிஎஸ்கே அணி கடும் முயற்சி எடுத்து வாங்க வேண்டும் என்றும் அஸ்வின் யோசனை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
