கோவை: டிஎன்பிஎல் தொடரில் நாளை திருச்சி அணிக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு அஸ்வினை பிளேயிங் லெவனில் சேர்க்காததே முக்கிய காரணமாக அமைந்தது. இந்தப் போட்டியின் போது ஒரு சில நாட்களில் மட்டும் அஸ்வின் ஃபீல்டிங்கில் ஈடுபட்டார். அதேபோல் ஜடேஜாவுக்கு சில ஆலோசனைகளையும் வழங்கினார்.

இந்தப் போட்டி நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், அடுத்த நாளே தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடங்கியது. முதல் போட்டியில் கோவை - திருப்பூர் அணிகள் மோதின. இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஆனால் அஸ்வின் இங்கிலாந்தில் இருப்பதால், டிஎன்பிஎல் தொடரில் எப்போது பங்கேற்பார் என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் நாளை கோவையில் நடக்கவுள்ள திருச்சி அணிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் அணியின் கேப்டனாக அஸ்வின் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் இருந்து இன்று புறப்பட்டுள்ள அஸ்வின், நாளை கோவையில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு டிஎன்பிஎல் தொடருக்காக ஏலம் நடக்கவே அஸ்வின் முக்கியக் காரணமாக இருந்தவர்.
அதேபோல் தமிழ்நாட்டில் சிறப்பாக விளையாடும் வீரர்களை தொடக்கத்திலேயே கண்டறிந்து ஐபிஎல் அணிகளுக்கு பரிசீலனையும் செய்து வருகிறார். சர்வதேசன் கிரிக்கெட்டின் மிக முக்கிய போட்டிக்காக இங்கிலாந்து சென்ற அஸ்வின், 2 நாட்கள் இடைவெளியில் தமிழ்நாட்டில் நடக்கும் லீக் தொடரில் விளையாடவுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.