சென்னை: அஸ்வின் சமீபத்தில் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் அதற்கான காரணத்தை கூறி இருக்கிறார். அப்போது தோனி குறித்த தனது பிரமிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான அஸ்வின், புதன்கிழமை அன்று தனது ஐபிஎல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு, தனது ஓய்வு முடிவை அவர் அறிவித்தார். 2009-ம் ஆண்டு ஐபிஎல்-ல் அறிமுகமான அஸ்வின், சென்னை சூப்பர் கிங்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய ஐந்து அணிகளுக்காக மொத்தம் 221 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

"அடுத்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட முடியுமா என யோசித்தேன். மூன்று மாதங்கள் நடக்கும் ஐபிஎல் தொடர் என் சக்தியை உறிஞ்சிவிடுகிறது. இதை நினைக்கும்போதுதான், மகேந்திர சிங் தோனி போன்ற ஒருவரைப் பார்த்து நான் பிரமித்துப்போகிறேன்," என்று கூறி, தனது ஐபிஎல் ஓய்வுக்கான உண்மையான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
தனது யூடியூப் சேனலில் இதுகுறித்து விரிவாகப் பேசியுள்ள அஸ்வின், "ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கான மூன்று மாத கால அட்டவணை எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. பயணங்கள், போட்டிகள், அதன்பிறகு உடலைத் தேற்றுவது என வயது ஏற ஏற இது சவாலாக மாறுகிறது. வயதாகும் போது, ஐபிஎல் போன்ற நீண்ட தொடர்களில் விளையாடுவதற்கான ஆற்றல் குறைகிறது" என்று கூறியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் திரும்பிய அஸ்வின், 9 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். அவரது ஆட்டம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், அணியிலிருந்து அவர் நீக்கப்படலாம் என்று செய்திகள் பரவிவந்த நிலையில், திடீரென ஓய்வு முடிவை அறிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
தனது ஓய்வு அறிக்கையில், "ஒரு கிரிக்கெட் ஆராய்ச்சியாளராக எனது பயணம் இன்று தொடங்குகிறது" என்று அஸ்வின் குறிப்பிட்டிருப்பது, அவரது எதிர்காலத் திட்டங்கள் குறித்த எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது. இங்கிலாந்தின் 'தி ஹன்ட்ரட்', தென்னாப்பிரிக்காவின் 'எஸ்ஏ20' போன்ற வெளிநாட்டு லீக்குகளில் அவர் பங்கேற்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மற்றொரு லீக் தொடரில் பங்கேற்பதற்காகப் பதிவு செய்திருப்பதை அஸ்வின் உறுதிப்படுத்தியிருந்தாலும், அதுகுறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை. மொத்தம் 221 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், 187 விக்கெட்டுகளை வீழ்த்தி, 833 ரன்களையும் எடுத்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணியை 28 போட்டிகளில் கேப்டனாக வழிநடத்திய அனுபவமும் அவருக்கு உண்டு.