சென்னை: சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வுபெற்ற தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், தனது கிரிக்கெட் பயணத்தின் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கத் தயாராகிவிட்டார். விளையாட்டு வீரராக மட்டுமின்றி, பயிற்சியாளராகவும் வெளிநாட்டு டி20 லீக்குகளில் களம் காண அவர் திட்டமிட்டுள்ளது, கிரிக்கெட் உலகில் புதிய அலைகளை உருவாக்கியுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) விதிகளின்படி, இந்திய வீரர்கள் வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென்றால், சர்வதேச கிரிக்கெட், உள்ளூர் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் என அனைத்து விதமான இந்திய கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 27) அன்று ஐபிஎல் தொடரிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்ததன் மூலம், அஸ்வின் இந்தத் தகுதியைப் பெற்றுள்ளார். அவர் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இருந்தார். இதன்மூலம், வெளிநாட்டு லீக்குகளில் விளையாட அவருக்கு இருந்த தடைகள் விலகியுள்ளன.
தன்னுடைய 38 வயதிலும் உடல் தகுதியுடன் இருக்கும் அஸ்வின், அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்குத் தன் கிரிக்கெட் வாழ்க்கையை நீட்டிக்கத் திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் (MLC), இங்கிலாந்தின் 'தி ஹன்ட்ரட்' (The Hundred) மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ILT20 தொடர்களில் விளையாட அதிக வாய்ப்புள்ளது. தென்னாப்பிரிக்காவின் SA20 தொடருக்கான வீரர்கள் தேர்வு முடிந்துவிட்டதால், இந்த ஆண்டு அதில் பங்கேற்பது கடினம். இருப்பினும், அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிலும் அஸ்வினைக் காணமுடியும்.
அஸ்வின், வெறும் வீரராக மட்டுமல்லாமல், வீரர் மற்றும் பயிற்சியாளர் என்ற இரட்டைப் பாத்திரத்தில் களமிறங்க ஆர்வமாக இருக்கிறார். கிரிக்கெட் உலகின் 'பேராசிரியர், சயின்டிஸ்ட்' என்று அறியப்படும் அஸ்வினின் ஆட்ட நுணுக்கமும், கள வியூகங்களும் அவரை இந்தப் புதிய பொறுப்புக்கு மிகச் சரியாகப் பொருந்தச் செய்கின்றன.
ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக் (BBL) உட்பட பல முன்னணி லீக் நிர்வாகங்கள் அவரைத் தொடர்புகொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் அணிகளுக்கு ஆலோசனை வழங்குவது, வர்ணனையாளர் என அவருக்குப் பல வாய்ப்புகள் இருந்தாலும், இப்போதைக்கு அவரது முழு கவனமும் வீரராகத் தன் பயணத்தைத் தொடர்வதிலேயே உள்ளது.
இதுகுறித்து அஸ்வின் கூறுகையில், "யாருடைய விமர்சனங்களும் இன்றி, என் கடைசி சில கிரிக்கெட் ஆண்டுகளை நான் முழுமையாக அனுபவிக்க விரும்புகிறேன். என் வாழ்க்கையை என் விருப்பப்படி வாழ விரும்புகிறேன்," என்று கூறியுள்ளார்.
அஸ்வினின் இந்த முடிவு, ஓய்வுபெற்ற இந்திய வீரர்களுக்குப் புதிய பாதைகளைத் திறந்துவிட்டுள்ளது. இனி, தமிழகத்தின் 'கிரிக்கெட் விஞ்ஞானியை' உலகின் பல்வேறு மைதானங்களில், புதிய அவதாரத்தில் காணலாம்.