நியூயார்க் : இந்திய கிரிக்கெட் அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் லாபியை பயன்படுத்தி இரண்டு வீரர்கள் இடம் பெற்று விட்டதாக ரசிகர்கள் சிலர் விளாசி வருகின்றனர். 2021 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஆல்-ரவுண்டர் சிவம் துபே இடம் பெற்றனர். இவர்கள் இருவரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டனர்.
ரவீந்திர ஜடேஜா கடந்த ஓராண்டில் இந்திய டி20 அணியில் அதிகமாக வாய்ப்பு பெறவில்லை. ஆனால், அவர் நேரடியாக டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற்றார். சிவம் துபே ஐபிஎல் தொடரில் அதிரடியாக பேட்டிங் ஆடி இந்திய அணியில் வாய்ப்பு பெற்றார்.

ஆனால், இவர்கள் இருவரும் வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் சரியாக ரன் குவிக்கவில்லை. சிவம் துபே 16 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி இரண்டு ஓவர்களில் பேட்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா 6 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார்.
இதை எடுத்து இவர்கள் இருவரும் டெஸ்ட் போட்டி போல ஆடி வருவதாகக் கூறி ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இவர்கள் இருவரும் சிஎஸ்கே லாபியை பயன்படுத்தி இந்திய அணியில் இடம் பெற்று விட்டதாக அவர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். அதில் எந்த உண்மையையும் இருக்க வாய்ப்பில்லை என்றாலும் கூட சிஎஸ்கே அணியில் நன்றாக ஆடிய இருவரும் இந்திய அணிக்காக மோசமாக ஆடி வருவதை அவர்கள் சுட்டிக்காட்டி இப்படி விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்திய அணி ஜூன் 4 அன்று தன் முதல் டி20 உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க உள்ளது. அயர்லாந்து அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா நிச்சயம் இடம் பெறுவார். ஆனால், சிவம் துபேவுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான். டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றது முதல், பயிற்சிப் போட்டி வரை அவரது பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருப்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என கூறப்படுகிறது.