மும்பை: ரவீந்திர ஜடேஜா மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வை அறிவித்த நிலையில், அவர்களுக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த வீரராகப் பார்க்கப்படும் ரவீந்திர ஜடேஜாவும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அவர் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் ஆல்ரவுண்டராக ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில், ஆல்ரவுண்டர்கள் பிரிவில் ரவீந்திர ஜடேஜா 458 புள்ளிகளுடன் தொடர்ந்து 1152வது நாளாக முதலிடத்தில் நீடித்து வருகிறார். இது ஒரு மாபெரும் சாதனையாகும். இதற்கு முன்பு ஜேசன் ஹோல்டர் படைத்த சாதனையை ரவீந்திர ஜடேஜா முறியடித்துள்ளார்.

ரவீந்திர ஜடேஜா 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு வாரம் மட்டும் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் ஆல்ரவுண்டராக இருந்தார். அதன் பிறகு அந்த இடம் அவரை விட்டுச் சென்றது. அதன் பிறகு மார்ச் 9, 2022 அன்று மீண்டும் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் ஆல்ரவுண்டராக மாறினார். அப்போது முதல் அந்த முதலிடத்தை அவர் தக்க வைத்து வருகிறார்.
இந்த 1152 நாட்களில் ரவீந்திர ஜடேஜா 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 36.71 என்ற பேட்டிங் சராசரியில் 1175 ரன்கள் எடுத்துள்ளார். மூன்று சதங்கள் மற்றும் ஐந்து அரை சதங்களை அடித்துள்ளார். மேலும், 22.34 என்ற பௌலிங் சராசரியுடன் 91 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2024ஆம் ஆண்டு மட்டும் அவர் டெஸ்ட் போட்டிகளில் 29 என்ற பேட்டிங் சராசரியில் 527 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 48 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார்.
அவருக்கு அடுத்த இடத்தில் தற்போது வங்கதேச ஆல்ரவுண்டர் மெஹிதி ஹசன் மிராஸ் இருக்கிறார். எனினும், ரவீந்திர ஜடேஜா அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாட உள்ளதால், அவரது தரவரிசைப் புள்ளி மேலும் உயர்வைச் சந்திக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.