பாலக்கலே: கடந்த 4 ஆண்டுகளாக இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விளையாடிய 22 ஒருநாள் போட்டிகளில் 10 போட்டிகளில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. சமீப காலங்களில் ரவீந்திர ஜடேஜா அளவிற்கு திறமையை வளர்த்துக் கொண்ட வீரர் யாருமே இல்லை என்ற அளவிற்கு விளையாடி வருகிறார். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என்று எந்த வடிவமாக இருந்தாலும், ஜடேஜாவின் ஆட்டம் வெறித்தனமாக உள்ளது. பென் ஸ்டோக்ஸை விடவும் சிறந்த ஆல்ரவுண்டராக வளர்ந்திருக்கிறார்.

குறிப்பாக 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு பின் ரவீந்திர ஜடேஜாவின் பேட்டிங் உச்சத்தில் இருக்கிறது. ஆட்டத்தின் எந்த சூழலில் களமிறங்கினாலும், ரிஸ்க் இல்லாமல் பேட்டிங் ஆடும் ஜடேஜாவை விக்கெட் வீழ்த்துவது எளிதல்ல. அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டிற்கு ஏற்றவாறு சிங்கிளை அதிகமாக எடுக்கக் கூடிய வீரராக ஜடேஜா இருக்கிறார்.
ஆனால் ஜடேஜாவின் பேட்டிங் எந்த அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளதோ, அதே அளவிற்கு ஜடேஜாவின் பவுலிங் மோசமாகியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தலாக பந்துவீசி வந்தாலும், ஒருநாள் கிரிக்கெட்டில் ஜடேஜா பின்னடைவை சந்தித்து வருகிறார். ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் லைனில் பந்துவீசும் ஜடேஜாவை பேட்ஸ்மேன்கள் எளிதாக சமாளித்து ரன்கள் சேர்க்க தொடங்கியுள்ளனர்.
கடந்த 4 ஆண்டுகளில் ஜடேஜா ஆடிய 22 இன்னிங்ஸ்களில் 49.77 பேட்டிங் சராசரியுடன் 448 ரன்களை விளாசி இருக்கிறார். ஆனால் பந்துவீச்சில் 22 இன்னிங்ஸ்களில் 10 போட்டிகளில் விக்கெட்டுகளே வீழ்த்த முடியாமல் தவித்து வந்திருக்கிறார். இதனால் ஆடுகளத்தில் ஸ்பின் இல்லையென்றால் ஜடேஜாவின் பந்துவீச்சு எடுபடாது என்பது தெளிவாக தெரிய வருகிறது.
இதனை கணக்கிட்டு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்திய அணியின் டாப் ஆர்டரில் வேறு எந்த பேட்ஸ்மேனாலும் பந்துவீச முடியாது. இதனால் முழுக்க முழுக்க இந்திய அணி குல்தீப் யாதவை மட்டுமே மனதில் வைத்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.