அகமதாபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சாம்பியன் பட்டன் வென்று இருக்கிறது என்றால் அதற்கு முக்கியமான காரணம் ஜடேஜா தான். கடைசி இரண்டு பந்தில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜடேஜா ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இதன் மூலம் சிஎஸ்கேவின் எதிர்காலம் நான்தான் என்பதை சொல்லாமல் தனது பேட்டிங் மூலம் அனைவருக்கும் புரிய வைத்துவிட்டார் ஜடேஜா. வெற்றியை கொண்டாடிய நிலையில் கிரிக்கெட் வர்ணனையாளரிடம் பேசினார்.

இது என்னுடைய சொந்த மண். குஜராத்தில் இருந்து தான் நான் வந்தேன். என் சொந்த மண்ணில் என் குடும்ப உறுப்பினர்களுக்கு முன் விளையாடியது சிறப்பான உணர்வாக இருந்தது. இதேபோன்று ரசிகர்களும் பிரமிக்க வைக்கும் வகையில் இருந்தனர். மழை பெய்த நிலையிலும் அவர்கள் போட்டிக்காக நேற்று முழுவதுமாக காத்திருந்தனர்.
சிஎஸ்கே ரசிகர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை நான் கூற விரும்புகிறேன். எங்களுக்காக நீங்கள் கொடுத்த ஆதரவு நிச்சயம் போற்றத்தக்கது . இந்த வெற்றியை எங்கள் அணியில் உள்ள ஒரு ஸ்பெஷல் வீரருக்கு நான் வழங்க விரும்புகிறேன். அது வேறு யாருமல்ல அது எங்கள் தோனி தான்.
அணிக்காக வெற்றி பெற்றுத்தர முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. பந்தை பார்த்து என்னால் எவ்வளவு சுழற்ற முடியுமோ அவ்வாறு செய்ய வேண்டும் என்று எண்ணி இருந்தேன். என் மீது நான் நம்பிக்கை வைத்து, பந்தை நேராக சிக்ஸருக்கு அடிக்க வேண்டும் என்று எண்ணினேன். ஏனென்றால் மோகித் சர்மா ஸ்லோவாக வந்தை வீசுவார் என்று எனக்கு தெரியும். இதனால் என்னால் அப்படி அடிக்க முடிந்தது என்று ஜடேஜா கூறினார் .