அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் தந்தை குஜராத் பத்திரிக்கையான திவ்யா பாஸ்கர்-க்கு அளித்த பேட்டியில் ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவாபா குடும்பத்தை பிரித்து விட்டதாக குற்றம் சுமத்தி இருந்தார். ரிவாபா, குஜராத் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஜடேஜாவின் தந்தை, ரிவாபா குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதை அடுத்து கடும் கோபம் கொண்ட ரவீந்திர ஜடேஜா சமூக வலைதளத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். அந்த பேட்டி அர்த்தமற்றது மற்றும் தவறானது. அது தன் மனைவியின் நன்மதிப்பை சீர்குலைக்கும் முயற்சி என அவர் தன் தந்தைக்கு எதிராகவே கொந்தளித்து இருக்கிறார்.

ரவீந்திர ஜடேஜாவின் தந்தை அனிருத்சிங் அளித்த அந்த பேட்டியில், ரிவாபா திருமணம் ஆன மூன்றே மாதங்களில் குடும்பத்தை பிரித்தார் எனவும், அப்போதே அனைத்து சொத்துக்களையும் தன் பெயருக்கு மாற்ற வேண்டும் எனவும் கேட்டார். குடும்பத்தில் விரிசலை ஏற்படுத்தினார். அவருக்கு குடும்பம் தேவையில்லை. தனியான வாழ்க்கை தான் வேண்டும். நானும் அவர்களை அழைப்பது இல்லை. அவர்களும் என்னை அழைப்பது இல்லை. நான் தனியாக வசிக்கிறேன். நான் ஜடேஜாவை பார்ப்பதே இல்லை. ரிவாபா என்ன மேஜிக் செய்தாரோ, எனக்கு தெரியவில்லை என்று கூறி இருந்தார்.
மேலும், அவர் எனது மகன். அதுதான் என் இதயத்தை சுட்டு எரிக்கிறது. அவருக்கு திருமணம் நடத்தியே இருக்க வேண்டாம், அவர் கிரிக்கெட் வீரராக ஆகியே இருக்க வேண்டாம் என இப்போது நினைக்கிறேன். அப்படி இருந்தால் இந்த விஷயங்களை எல்லாம் நாங்கள் அனுபவிக்க வேண்டிய தேவை இருக்காது. நான் எனது பேத்தியை கடந்த ஐந்து ஆண்டுகளாக பார்க்கவே இல்லை. ரவீந்திர ஜடேஜாவின் மாமியார் குடும்பம் தான் அனைத்தையும் கவனித்துக் கொள்கிறார்கள். அவர்கள் எல்லாவற்றிலும் தலையிடுகிறார்கள். அவர்கள் வங்கிக் கணக்கு பெரிதாகி விட்டது, அதனால் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எனவும் கூறி இருந்தார் ஜடேஜாவின் தந்தை.
இந்த பேட்டியால் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்ட நிலையில், ரவீந்திர ஜடேஜா சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில், "அந்த சித்தரிக்கப்பட்ட பேட்டியில் இருப்பதை அனைவரும் புறக்கணியுங்கள். திவ்யா பாஸ்கரில் வெளியான அந்த பொய்யான பேட்டியில் கூறப்பட்டு இருந்த விஷயம் எல்லாமே அர்த்தமற்றவை மற்றும் பொய்யானவை. அது ஒரு தலைப்பட்சமான கருத்துக்கள். என் மனைவியின் நன்மதிப்பை சீர்குலைக்கும் இந்த முயற்சி சரியானதல்ல மற்றும் கண்டிக்கத்தக்கது. நானும் கூட நிறைய சொல்ல வேண்டி இருக்கிறது. ஆனால், அவற்றை நான் பொதுவெளியில் சொல்ல விரும்பவில்லை" எனக் கூறி இருக்கிறார் ரவீந்திர ஜடேஜா .