மும்பை: உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் உள்ள ஜடேஜா தனது பேட்டிங் ஃபார்மை மீட்டெடுக்கவில்லை என்றால், இந்திய அணி பின்விளைவுகளை சந்திக்கும் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் விமர்சித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா 36 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். ஃபினிஷிர் ரோலில் விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜா, டெய்லண்டர்களுடன் அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்த்தால், சிங்கிள் ரன்களாக சேர்த்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்லாமல் 2022ஆம் ஆண்டு முதல் ரவீந்திர ஜடேஜா ஒருநாள் கிரிக்கெட்டில் 14 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 225 ரன்கள் மட்டுமே சேர்த்திருக்கிறார். அதிலும் ஒரேயொரு அரைசதம் உட்பட ஜடேஜாவின் பேட்டிங் சராசரி 16.07ஆக மட்டுமே உள்ளது. அதேபோல் 14 இன்னிங்ஸ்களில் ஜடேஜா ஒருமுறை மட்டுமே 100 ஸ்ட்ரைக் ரேட்டிற்கு மேலாக விளையாடி இருக்கிறார்.
பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டாலும், 7வது பேட்ஸ்மேனாகவும் ஃபினிஷராகவும் ஜடேஜா மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகள் நாளை தொடங்கவுள்ளது. இதில் இந்திய அணி இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுடன் பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது.
இந்த பயிற்சி போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ள நிலையில், முன்னாள் வீரர் இர்பான் பதான் முக்கியமான அறிவுரையை வழங்கியிருக்கிறார். இர்பான் பதான் பேசுகையில், இந்திய அணியை பொறுத்தவரை 3 விவகாரங்கள் பிரச்சனையாக உள்ளது. அதில் முதல் பிரச்சனை இந்திய அணியின் ஃபினிஷர் ரோலில் விளையாடும் ஜடேஜா தான். பயிற்சி போட்டிகளில் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கொடுத்து அவரை ஃபார்முக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.
அதேபோல் இந்திய அணியின் டெத் ஓவர் பவுலிங் மோசமாக இருக்கிறது. அதனை பயிற்சி போட்டிகளில் மாற்றவும், இந்திய அணியின் காம்பினேஷன் எது என்பதையும் பயிற்சி போட்டியிலேயே முடிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இர்பான் பதான் ஜடேஜாவை பற்றி வெளிப்படையாக விமர்சித்துள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.