காயத்தால் அவதி... ஜடேஜா இல்லாம முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி... பினிஷர் இல்லாம போட்டியா?
சிட்னி : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் ஜடேஜாவிற்கு தலையில் காயம் ஏற்பட்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
தொடர்ந்து டி20 தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள அவர், 3 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டிய நிலையில், தற்போது முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.
டெஸ்ட் தொடர்களில் முக்கிய வீரராக உள்ள ஜடேஜா இல்லாமல் டெஸ்ட் போட்டியை, அதிலும் அந்நிய நாட்டில் விளையாடப்பட உள்ள முதல் பகலிரவு போட்டியை இந்திய அணி எதிர்கொள்வது குறித்து தற்போது கேள்வி எழுந்துள்ளது.

தொடரிலிருந்து வெளியேற்றம்
இந்திய அணியின் சிறப்பான ஆல்-ரவுண்டர் மற்றும் பினிஷராக உள்ளார் ரவீந்திர ஜடேஜா. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் இவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து டி20 தொடரிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். தொடர்ந்து மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறார் ஜடேஜா.

கேள்விக்குறியான முதல் டெஸ்ட்
ஐசிசி விதிமுறைகளின்படி தலையில் காயம் ஏற்பட்டால் தொடர்ந்து 10 நாட்களாவது ஓய்வில் இருக்க வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், ஜடேஜா 3 வாரங்களுக்கு ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வரும் 17ம் தேதி துவங்கவுள்ள ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது.

பங்கேற்பது சந்தேகம்
அவருக்கு தலையில் பந்து பட்டதன் காரணமாக மயக்கம் மற்றும் தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காயம் அதிகமாகும் நிலையில் 26ம் தேதி மெல்போர்னில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அவர் பங்கேற்பது இயலாமல் போகும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தேற அவகாசம் தேவை
காயம் காரணமாக முன்னதாக வரும் 10ம் தேதி முதல் நடைபெறவுள்ள பகலிரவு வார்ம்-அப் போட்டியிலிந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். தலையில் பந்து பட்ட அதிர்ச்சியிலிருந்து அவர் தேறிய நிலையிலும் தொடையில் ஏற்பட்ட காயம் ஆறுவதற்கு சிறிது அவகாசம் தேவைப்படுதாகவும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications