மும்பை: 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றவுடன் முக்கிய வீரர்களான விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவரும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். உலகக்கோப்பை வென்றதால் அவர்கள் மூவரும் அந்த மகிழ்ச்சியில் இளம் வீரர்களுக்கு வழிவிட்டு தாமாக ஓய்வு பெற்றதாகவே அனைவரும் நினைத்து வந்தனர். ஆனால், அதன் பின்னணியில் கவுதம் கம்பீர் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
37 வயதான ரோஹித் சர்மா ஓய்வு பெறுவது ஏற்புடையதாக உள்ளது. ஆனால், 35 வயதே ஆன விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்து இருப்பது ஏன் என்ற கேள்வி சிலருக்கு இருக்கக் கூடும். அதற்கு காரணம் கவுதம் கம்பீர் கொடுத்த மறைமுக அழுத்தம் தான் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட பின் பத்திரிக்கையாளர்களிடம் கேப்டன் ரோஹித் சர்மா பேசிய போது, வெளியேற வேண்டிய சூழ்நிலை இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். அந்த வீடியோ தற்போது பரவி வருகிறது.

இன்னும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்படாத கவுதம் கம்பீர் அதற்குள் இந்திய அணியில் அனைத்து முடிவுகளையும் எடுத்து வருகிறார். அவர் பிசிசிஐ-க்கு சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார். அதை எல்லாம் ஏற்றுக் கொண்டால் தான் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்றுக்கொள்வேன் எனவும் அவர் கூறியிருக்கிறார். இந்திய டி20 அணி என்பது ஒரு தனி அணியாக இருக்க வேண்டும். அந்த அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் யாரும் ஒரு நாள் அணியிலோ, டெஸ்ட் அணியிலோ இடம் பெறக் கூடாது என்பது அவரது கட்டுப்பாடுகளில் முக்கியமான ஒன்றாகும். அதன் காரணமாகவே ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இடம் பெற வேண்டி, சர்வதேச டி20 போட்டிகளில் கோலி, ரோஹித் மற்றும் ஜடேஜா ஓய்வை அறிவித்து உள்ளனர்.
2024 ஐபிஎல் தொடர் நடைபெற்று வந்த போதுதான் கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவது உறுதியானது. அப்போது அவர் டி20 அணியின் மூத்த வீரர்களை நீக்க வேண்டும் என்ற விஷயத்தை பிசிசிஐ-யிடம் அறிவுறுத்தி இருக்கிறார். அதை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
அதனால், விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா இக்கட்டான நிலைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் எப்படியாவது டி20 உலகக் கோப்பையை வென்று அந்த மான் நிறைவுடன் விடை பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் அவர்கள் போராடி அதை செய்து காட்டினர். அந்த மனநிறைவுடன் இனி நமக்கு டி20 அணியில் இடம் இல்லை என்பதை உணர்ந்து மூவரும் தாமாகவே ஓய்வை அறிவித்துள்ளனர்.
இதன்மூலம் உலகக் கோப்பை வெற்றியுடன் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றோம் என்ற மகிழ்ச்சி அவர்களுக்கு எப்போதும் இருக்கும். மாறாக கவுதம் கம்பீர் அவர்களை அணியை விட்டு நீக்கினால் அது கசப்பான அனுபவமாக இருக்கும். இந்த இக்கட்டான நிலை குறித்து போட்டி முடிந்தவுடன் ரோஹித் சர்மா சூசகமாக பேசினார். அந்த வீடியோ இப்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களால் பரப்பப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், பத்திரிகையாளர்கள் ரோஹித் சர்மாவிடம், "ஏன் நீங்கள் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து இப்போதே ஓய்வு பெற்றீர்கள்?" என கேட்டனர். அதற்கு பதில் அளித்த ரோஹித் சர்மா, "நான் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என நினைக்கவில்லை. ஆனால், அதற்கான சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இப்போது (உலகக்கோப்பை வெற்றியுடன்) ஓய்வு பெறுவது தான் சிறந்த முடிவாக இருக்கும் என்பதால் நான் இப்போது இந்த முடிவை அறிவித்தேன்" என்றார்.
அதாவது, கம்பீர் மற்றும் பிசிசிஐ தங்களை வெளியற்ற இருப்பதால், அந்த இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்து ஓய்வு பெற்றதாக சூசகமாக கூறி இருந்தார். கிட்டத்தட்ட இதே மனநிலையில் தான் விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜாவும் தங்கள் முடிவுகளை அறிவித்துள்ளனர். இனி கவுதம் கம்பீரின் ஆதிக்கம் இந்திய அணியில் துவங்க உள்ளது. அதற்கான முதல் அடி தான் இது.
இன்னும் அதிகாரப்பூர்வமாக தலைமை பயிற்சியாளராக அறிவிக்கப்படாத ஒருவர் இந்திய அணியின் மூன்று ஜாம்பவான்களை ஒரே அடியில் சாய்த்து இருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கம்பீரின் ஆதிக்கத்தில் இந்திய அணி இனி சரியான பாதையில் செல்லுமா? அல்லது அவரது அதிரடியான முடிவுகளால் சரிவை சந்திக்குமா?.