துபாய்: இந்திய அணியின் மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜா ஓய்வு பெறப்போவதாக கூறப்படுகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் அவர் தனது பந்துவீச்சை வீசி முடித்த பிறகு நடந்த ஒரு சம்பவம் காரணமாக ரசிகர்கள் அவர் இந்த போட்டியுடன் ஓய்வை அறிவிக்கப் போவதாக கூறி வருகின்றனர்.
விராட் கோலி அவரை கட்டி அணைத்தது நெகிழ வைக்கும் சம்பவமாக ரசிகர்களால் பகிரப்பட்டது. இது ஓய்வு குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஜடேஜா செய்த சாதனைகள் பற்றி நினைவுகூர்ந்து வருகின்றனர்.

ரவீந்திர ஜடேஜாவுக்கு தற்போது 36 வயது ஆகிறது. அவர் கடந்த ஆண்டு 2024 டி20 உலக கோப்பையுடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து இருந்தார். அவர் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் ஓய்வு முடிவை எடுத்து இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் மிகக் கட்டுக்கோப்பாக பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா, பத்து ஓவர்களில் 30 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். டாம் லாதம் விக்கெட்டை அவர் வீழ்த்தினார்.
ரவீந்திர ஜடேஜா தனது பத்து ஓவர்களையும் வீசி முடித்த பின் மூத்த வீரரான விராட் கோலி அவர் அருகே சென்று கட்டி அணைத்தார். ரவீந்திர ஜடேஜா சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதால் தான் விராட் கோலி அவரை அணைத்து அவருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார் என்ற தகவல் கூறப்படுகிறது.
சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை விராட் கோலி கட்டி அணைத்தார். அதன் பின்னர் ஸ்மித் தனது ஓய்வு முடிவை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. எனவே, விராட் கோலி ஓய்வு முடிவு பற்றி முன்பே தெரிந்ததால் தான் ஜடேஜாவையும் கட்டி அணைத்து அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார் என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
ரவீந்திர ஜடேஜா 204 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அதில் மொத்தம் 231 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். மேலும் ஒருநாள் போட்டிகளில் 136 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 2797 ரன்களை சேர்த்து இருக்கிறார்.