இந்தூர்: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா இழந்தது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அணியின் மூத்த ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் கிரிக்கெட் வாழ்க்கை குறித்த பெரிய கேள்வியையும் எழுப்பியுள்ளது. ஒருவேளை நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியே ஜடேஜாவின் கடைசி ஒருநாள் போட்டியாக அமையலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2024-ல் நியூசிலாந்திடம் டெஸ்ட் தொடரை இழந்தபோது ரோஹித் மற்றும் கோலியின் எதிர்காலம் கேள்விக்குறியானது. பின்னர் அவர்கள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒதுங்கினர். அதேபோல தற்போது ஒருநாள் தொடர் தோல்விக்குப் பிறகு, விமர்சனங்களின் மையப்புள்ளியாக ரவீந்திர ஜடேஜா மாறியுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியா தொடருக்கான அணியில் ஜடேஜா சேர்க்கப்படவில்லை. அப்போது தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், "ஜடேஜா இன்னும் உலகக்கோப்பைத் திட்டத்தில் இருக்கிறார். இரண்டு இடதுகை ஸ்பின்னர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல முடியாது என்பதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது" என்று விளக்கமளித்தார். ஆனால், ஜடேஜா அணிக்குத் திரும்பிய பிறகு செய்த சம்பவங்கள் எதுவும் திருப்திகரமாக இல்லை.
ஜடேஜாவின் சமீபத்திய ஆட்டம் படுமோசமாக உள்ளது. புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே அதிர்ச்சியாக இருக்கிறது. கடந்த நவம்பர் மாதத்திற்குப் பிறகு தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக ஜடேஜா 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் மொத்தம் 48 ஓவர்கள் வீசியுள்ள அவர் கைப்பற்றியது ஒரே ஒரு விக்கெட் மட்டுமே. 288 பந்துகளை வீசி ஒரு விக்கெட் மட்டுமே எடுத்திருப்பது கவலையளிக்கிறது.
மேலும், பேட்டிங்கில் இந்த 6 போட்டிகளில் அவர் எடுத்த ரன்கள் வெறும் 99. ஸ்ட்ரைக் ரேட் 88.39 மட்டுமே. 2023 உலகக்கோப்பைக்குப் பிறகு 13 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள ஜடேஜா, ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. 'பினிஷர்' ரோலில் களமிறங்கும் அவர், கடைசி 10 ஓவர்களில் பவுண்டரிகள் அடிக்கத் திணறி வருகிறார்.
ஜடேஜா தடுமாறி வரும் நிலையில், இளம் வீரர்கள் அந்த இடத்தைப் பிடிக்கத் தயாராக உள்ளனர். ஜடேஜா இல்லாத நேரத்தில் அணியில் இடம்பிடித்த அக்சர் பட்டேல், 15 இன்னிங்ஸ்களில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். எகானமியும் 4.32 ஆகச் சிறப்பாக உள்ளது. வாஷிங்டன் சுந்தரும் பந்துவீச்சில் சிக்கனமாக ரன்களைக் கொடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார்.
இந்தூர் போட்டியில் ஹர்ஷித் ராணா அடித்த அதிரடி அரைசதம் (52 ரன்கள்), இந்திய அணி நிர்வாகத்திற்குப் புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான இவர் லோயர் ஆர்டரில் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். எனவே, ஒரு பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் என்ற இடத்தை ஹர்ஷித் ராணா பெற்று விடுவார். எனவே, இந்திய அணி கூடுதலாக ஒரு முழுநேர சுழற்பந்துவீச்சாளரை பயன்படுத்தும் வாய்ப்பும் கிடைக்கும்.
இந்திய அணி அடுத்து ஜூலை மாதத்தில்தான் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. 2027 உலகக்கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ளதால், அங்குச் சுழற்பந்து வீச்சுக்கு பெரிய வேலை இருக்காது. இதனால் அணியில் ஒரே ஒரு ஸ்பின் பவுலிங் ஆல்-ரவுண்டர் மட்டுமே தேவைப்படுவார்.
தற்போதைய ஃபார்மை வைத்துப் பார்த்தால், ஜடேஜாவை விட அக்சர் பட்டேலுக்கே வாய்ப்பு அதிகம். மேலும் ஹர்திக் பாண்டியா, ஹர்ஷித் ராணா போன்ற வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்களும் இருப்பதால், ஜடேஜாவுக்கு இனி இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைப்பது கடினம் என்றே தெரிகிறது. "குட்-பை ஜடேஜா" என்று சொல்லும் நேரம் வந்துவிட்டதாகவே கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.