அகமதாபாத்: விஜய தசமியை முன்னிட்டு இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியும், பாஜக எம்எல்ஏ-வுமான ரிவாபா ஜடேஜா, துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுக்கு பூஜை செய்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஜடேஜா, டி20 உலகக்கோப்பை தொடருடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் ஜடேஜா, இதுவரை 74 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,130 ரன்களும், 303 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அடுத்ததாக நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு தீவிரமாக தயாராகி வருகிறார்.

வங்கதேச டெஸ்ட் தொடர் முடிவடைந்த பின் தனது பண்ணை வீட்டில் மனைவியுடன் ஜடேஜா ஓய்வில் இருந்தார். இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உடனடியாக புறப்பட்டு பெங்களூர் வந்திருக்கிறார். இதனிடையே ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி விடுமுறை கொண்டாட்டங்கள் களைகட்டின.
இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக அவரது இடத்தில் அவரின் மனைவியும், பாஜகவின் எம்எல்ஏ-வுமான ரிவாபா ஜடேஜா பங்கேற்றுள்ளார். விஜய தசமியை முன்னிட்டு குஜராத் மாநில ஜாம்நகரில் ஆயுதங்களுக்கு பூஜை செய்யும் சாஸ்திர பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரிவாபா ஜடேஜா, கத்தி மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுக்கு பூஜையை நடத்தியுள்ளார்.
ராஜ்புட் சமூகத்தைச் சேர்ந்த ஜடேஜா, தொடக்க காலம் முதலே வாள்வீச்சில் ஆர்வம் கொண்டவர். இதனால் கிரிக்கெட் போட்டிகளில் அரைசதம் அடித்தாலே, பேட்டை கத்தியை சுழற்றுவது போல் சுத்தி காட்டி கொண்டாட்டத்தில் ஈடுபடுவார். அதேபோல் அந்த சாஸ்திர பூஜையில் கலந்து கொண்ட அனைவர் முன்பாகவும் வாள் வைக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டது.
ஆனால் ஜடேஜா மனைவி ரிவாபா ஜடேஜா மட்டும் வாளுடன் சேர்த்து தனது துப்பாக்கியையும் எடுத்து வைத்து பூஜை நடத்தினார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. பொதுவெளியில் துப்பாக்கியை எடுத்து வைத்து பூஜை நடத்தியது சரியா என்ற ரசிகர்கள் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், அவர் பாஜக எம்எல்ஏ என்பதால், பாதுகாப்புக்காக துப்பாக்கியை வைத்துள்ளார் என்பதாகவும் தகவல் கூறப்படுகிறது.