டெல்லி: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் 391 ரன்களுடன் முதலிடத்தை மீண்டும் பிடித்து ஆரஞ்ச் கேப் பெற்றார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அம்பதி ராயுடு.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் இன்று நடந்த 33வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இதில் சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் அம்பதி ராயுடு 17 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 9 போட்டிகளில் 391 ரன்கள் குவித்து, இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். ஆரஞ்ச் கேப்பை மீண்டும் பெற்றார்.
டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ரிஷப் பந்த், 9 ஆட்டங்களில் 375 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி 349 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்றைய ஆட்டத்தில் 25 பந்துகளில் ஒரு பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 43 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம், 329 ரன்களுடன், அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.