பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆர்சிபி கேப்டனாக திரும்பிய விராட் கோலி வெற்றி பெற்று இருக்கிறார்..
இதனையடுத்து டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி டக் அவுட் ஆனார். ஷாபாஸ் அகமது 2 ரன்களில் வெளியேற 12 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்தது ஆர்சிபி தடுமாறியது.

இதனைத் தொடர்ந்து 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டுபிளஸிஸ், மேக்ஸ்வெல் இணை அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது. மேக்ஸ்வெல் 27 பந்துகளில் அரைசதம் கடக்க, டுபிளஸிஸ் 31 பந்தில் அரைசதம் எடுத்தார். டுபிளஸிஸ் 39 பந்துகளில் 62 ரன்கள் சேர்க்க, மேக்ஸ்வெல் 44 பந்தில் 77 ரன்கள் சேர்த்தார்.
இவர்கள் ஆட்டமிழந்த உடன், ஆர்சிபி அணியின் கீழ்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால் ஆர்சிபி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் பட்லர் டக் அவுட்டாக, படிக்கல், ஜெய்ஷ்வால் ஜோடி 2வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடினர்.
ஜெய்ஷ்வால் 37 பந்துகளில் 47 ரன்களும், படிக்கல் 34 பந்துகளில் 52 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 22 ரன்களில் வெளியேற, ஷிம்ரன ஹெட்மயர் 3 ரன்களில் ரென் அவுட் ஆனார். இதனால் ஆட்டம் ஆர்சிபியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. எனினும் கடைசி 2 ஓவரில் 33 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜூரல் சிக்சர் அடிக்க அந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது.
இதனால் கடைசி ஓவரில் 20 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட, அஸ்வின் முதல் பந்தில் பவுண்டரி, 2வது பந்தில் டபுள்ஸ், 3வது பந்தில் பவுண்டரி அடித்தார். இதனால் கடைசி 3 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட ஆட்டம் பரபரப்பு உச்சத்தை தொட்டது. இதில் 2 ரன் அவுட் வாய்ப்பை ஆர்சிபி வீரர்கள் தவறவிட்டதால், ஆர்சிபி கேப்டன் கோலி டென்ஷன் ஆனார். எனினும் அஸ்வின் 4வது பந்தில் ஆட்டமிழக்க, ராஜஸ்தான் அணியால் கடைசி 2 பந்தில் சிங்கிள்ஸ் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் பெங்களூரு அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.