பெங்களூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற ஆர் சி பி அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கோப்பை வென்று சாதனை படைத்தது. இதன் மூலம் விராட் கோலி தன்னுடைய ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக கோப்பையை வென்றார்.
இந்த கொண்டாட்டத்தை ஆர் சி பி தங்களது ரசிகர்களுடன் சொந்த ஊரில் மேற்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். இந்த ஆசைதான் தற்போது மிகப்பெரிய துயரத்தை அந்த அணி வீரர்களுக்கு கொடுத்திருக்கிறது.

இவ்வளவு பெரிய சாதனையை செய்தும் ஆர் சி பி அணியினரால் இந்த வெற்றியை மனதால் கொண்டாட முடியவில்லை.ஏனென்றால் பெங்களூரில் ஆர் சி பி வெற்றி பேரணியில் பங்கேற்க வந்த ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சி அடையச் செய்து இருக்கிறது.
மேலும் வெளியே ரசிகர்கள் உயிரிழந்த நிலையில், மைதானத்திற்குள் ஆர் சி பி அணி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதும் மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தல 10 லட்சம் வழங்க ஆர் சி பி அணி நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது.
இது தொடர்பாக அறிவிப்பை ஒன்றை வெளியிட்ட ஆர் சி பி அணி, பெங்களூரில் நேற்று நடைபெற்ற துரதிர்ஷ்ட சம்பவம் எங்களுக்கு மிகப்பெரிய வலியையும் கவலையையும் கொடுத்திருக்கிறது. ஆர்சிபி ரசிகர்களுடன் நாங்கள் எப்போதும் துணை நிற்போம். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதி உதவி அளிக்கும் விதமாகவும் 11 பேர் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்க முடிவெடுத்து இருக்கிறோம்.
அது மட்டுமில்லாமல் ஆர்சிபி கேர்ஸ் என்று ஒரு நிதியை திரட்ட போகிறோம். அதில் இந்த துயர சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவி செய்ய வழங்கப்படும். எங்கள் இதயத்தில் எப்போதுமே ஆர் சி பி ரசிகர்கள் குடியிருப்பார்கள். இந்த துயர சம்பவத்தில் நாங்கள் ஆர் சி பி ரசிகர்களுடன் கூடவே இருப்போம் என்று அந்த அணி தெரிவித்துள்ளது உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கும் ஏற்கனவே கர்நாடக அரசு தலா 10 லட்சம் ரூபாய் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.