புதிய பதவி
அதோடு புதிதாக ஒரு பதவி உருவாக்கப்பட்டு அதில் நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளரும், இந்திய அணிக்கு பயிற்சியாளராக முயன்று தோல்வி அடைந்த மைக் ஹெஸ்ஸன் அமர வைக்கப்பட்டுள்ளார். இது அந்த அணியின் கேப்டன் கோலிக்கு பாதகமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.
கோலிக்கு ஆப்பு
இந்த முறை கோலிக்கு ஆப்பு வைக்க உரிமையாளர் விஜய் மல்லையா முடிவு செய்துள்ளார் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுவரை கோலிக்கு சாதகமான பயிற்சியாளர்கல் நியமிக்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த முறை கோலி விரும்பாத ஒருவரை நியமித்து உள்ளனர் என்றும், அணியின் கேப்டனாக இருக்கும் கோலியிடம் ஆலோசிக்காமல் முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கருதப்படுகிறது.
மோசமான தோல்வி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடந்த மூன்று சீசன்களாக மோசமாக ஆடி வருகிறது. அதிலும் 2019 ஐபிஎல் தொடரில் கடைசி இடத்தை பிடித்து அதிர்ச்சி அளித்தது. கடந்த ஆண்டு டேனியல் வெட்டோரி பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ஆலோசகர்களாக இருந்த கேரி கிர்ஸ்டன், ஆஷிஷ் நெஹ்ராவை பயிற்சியாளர், துணை பயிற்சியாளராக நியமித்தனர்.
என்ன மாற்றம்?
தற்போது அவர்கள் இருவரையும் நீக்கி உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஒரே பயிற்சியாளராக சைமன் காட்டிச்-ஐ நியமித்துள்ளது. உதவி பயிற்சியாளர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. மேலும், அணியின் இயக்குனராக மைக் ஹெஸ்ஸன் நியமிக்கப்பட்டுள்ளார்.
உச்சத்தில் மைக் ஹெஸ்ஸன்
2019 சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக இருந்தார் மைக் ஹெஸ்ஸன். தற்போது அந்த அணியின் பதவியை துறந்து விட்ட அவர், இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக முயன்றார். ஆனால், அதில் தோல்வி அடைந்தார். இப்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் உச்சகட்ட பதவியில் அமர வைக்கப்பட்டுள்ளார்.
கோலி சுதந்திரம்
முக்கியமாக மைக் ஹெஸ்ஸனை அதிக சக்தி கொண்ட, அணி மேலாண்மை நிர்வாகம் தவிர யாரும் கேள்வி கேட்க முடியாத இடத்தில் அமர வைக்கப்பட்டு இருப்பது, கேப்டன் கோலிக்கு கடிவாளம் போட்டது போலத் தான். கோலியின் தனி ஆதிக்கம் இனி அந்த அணியில் இருக்காது என்றே கூறலாம். எல்லா முடிவுகளும் இனி மைக் ஹெஸ்ஸன் கையில் தான்.
பதவிக்கும் ஆபத்து
இந்த நியனமத்தில் ஒரு ட்விஸ்ட் உள்ளது. பலரும் கூறி வருவது போல கேப்டன் பதவியில் இருந்து கோலியை நீக்க பெங்களூர் அணி முடிவு செய்து இருக்கலாம். அதனால் தான் பொறுப்பான ஒரு பதவியை உருவாக்கி, அதில் திறமையானவரை நியமித்துள்ளார்கள் என்றும் தோன்றுகிறது. கோலியை நீக்குவதா? வேண்டாமா? என்ற முடிவு கூட இப்போது மைக் ஹெஸ்ஸன் கையில் தான் உள்ளது.
சைமன் காட்டிச் ஏன்?
சைமன் காட்டிச்-ஐ தலைமை பயிற்சியாளர் பதவியில் நியமிக்கப்பட்டு இருப்பதில் ஆச்சரியம் இல்லை. காரணம், அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக பல ஆண்டுகள் பதவியில் இருந்தார். கரீபியன் பிரீமியர் லீகில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை 2 முறை கோப்பை வெல்ல வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. .
பெங்களூரு என்ன செய்யும்?
2020 ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி என்ன செய்யப் போகிறது? கோலியை நீக்கப் போகிறதா? அல்லது கோலிக்கு கடிவாளம் மட்டும் போட்டு, ஹெஸ்ஸன் முடிவுகளை எடுக்கப் போகிறாரா? கடந்த ஐபிஎல் தொடரில் அணி தோற்ற போது உரிமையாளர் வெளிநாட்டில் தப்பி வாழும் விஜய் மல்லையா கேலி செய்து கருத்து கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.