காசியாபாத்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் இந்திய அணிக்காக விளையாடிய ஒரு வேகப்பந்து வீச்சாளர் மீது, பெண் ஒருவர் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாகப் புகார் அளித்துள்ளார். தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி மனதளவில், உணர்வுபூர்வமாக மற்றும் உடல்ரீதியாக அவர் பயன்படுத்திக்கொண்டதாக குற்றம் சுமத்தி இருக்கிறார்.
அந்தப் பெண் உத்தரப் பிரதேச மாநில முதல்வரின் இணையவழி புகார் மையத்தில் தனது புகாரைப் பதிவு செய்துள்ளார். அவரது புகாரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு காசியாபாத் காவல் நிலையத்திற்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜூலை 21-க்குள் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அந்தப் பெண் ஜூன் 14 அன்று தனது புகாரைக் காவல் நிலையத்தில் அளித்ததாகவும், ஆனால் அதை ஏற்க மறுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், அந்தப் பெண் யாஷ் தயாளுடன் ஐந்து ஆண்டுகளாக உறவில் இருந்ததாகவும், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக மனதளவிலும், உடலளவிலும், உணர்வுபூர்வமாகவும் அவர் பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவரது குடும்பத்தினரிடம் தன்னை மருமகளாக அறிமுகம் செய்ததாலும், ஒரு கணவரைப் போலவே நடந்துகொண்டதாலும் தான் அவரை நம்பியதாகத் தெரிவித்துள்ளார். தன்னை ஏமாற்றுவதை உணர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, உடல்ரீதியாக தன்னைத் தாக்கியதோடு மன உளைச்சலுக்கும் ஆளாக்கியதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும், அவர்கள் உறவில் இருந்தபோது நிதி அளவிலும் தன்னை பயன்படுத்திக்கொண்டு இருந்ததாகக் கூறியுள்ளார். பல பெண்களுடன் அவர் இதுபோன்ற தவறான உறவில் இருந்ததை பின்னர் தான் அறிந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக யாஷ் தயாளுடன் பேசியதற்கான ஸ்கிரீன்ஷாட்கள், வீடியோ கால் பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். காவல்துறை இந்தப் புகாரின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.